தினமணி 12.11.2009
மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் ரூ.96 கோடியில் புதிய கட்டடம்
திருப்பூர், நவ.12: திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் ரூ.96 கோடி மதிப்பில் 650 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதை 3 ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர் தாராபுரம் சாலையில் சுமார் 31 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் மாவட்ட அரசு மருத்துவமனை கட்டடம் மிகவும் பாழடைந்து காணப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்துசெல்லும் இம்மருத்துவமனையில் குடிநீர் வசதி, போதுமான படுக்கைகள், இசிஜி, ஸ்கே ன் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் நீடிக்கிறது.
நோயாளிகள் வழியிலேயே படுத்து சிகிச்சை பெறுவதுடன், போதுமான ஊழியர்கள் இல்லாதாததால் குப்பைகள் நிறைந்து சுகாதாரமின்றியும் காணப்படுகிறது.
இது குறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.
இதையடுத்து, திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் 650 படுக்கைகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய மருத்துவமனைக் கட்டடம் கட்ட அரசு இசைவு தெரிவித்துடன் அதற்குரிய திட்டவரைவை அனுப்ப அறிவுறுத்தியது.
அதன்படி, புதியதாக அமைக்கப்படும் மருத்துவமனை கட்டடம் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் அரசுக்கு திட்டவரைவு அனுப்பப்பட்டுள்ளது. அதில், முதல்கட்டமாக தரைதளம் மற்றும் 3 அடுக்குகளுடன் 17,199 ச.மீ. பரப்பில் கட்டப்படும் இக்கட்டடத்தின் தரைதளத்தில் 171, முதல் அடுக்கில் 148, 2வது அடுக்கில் 200, 3-வது அடுக்கில் 150 என 650 படுக்கை வசதிகள் செய்யப்படும்.
கொசுக்கள் புகாத நவீன ஜன்னல்கள், சுகாதாரமான குடிநீர் வசதிகள், தனியார் மருத்துவமனைக்கு நிகரான கட்டுமானங்கள், மருத்துவர்களுக்கான தனித்தனி அறைகள், பார்வையாளர்களுக்கான அறைகள், உணவகங்கள், டிஜிட்டல் திரை மூலம் உடனுக்குடன் அறியும் வசதிகள், சிறந்த வடிகால் வசதிகள், தீயணைப்பு கருவிகளுடன் இக் கட்டடம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுதவிர நிலநடுக்கத்தால் கட்டடம் பாதிக்கப்படாமல் இருக்க நவீன தொழிற்நுட்பமும் பயன்படுத்தப்பட உள்ளது.
இக்கட்டடம் கட்ட 2009-10-ம் ஆண்டில் ரூ.29 கோடியும், 2010-11-ம் ஆண்டில் ரூ.31.90 கோடியும், 2011-12-ம் ஆண்டில் ரூ.35.09 கோடியும் என 3 தவணைகளில் ரூ.95.99 கோடிக்கான மதிப்பீடுகளுடன் வரைபடம் தயாரிக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின்படி கட்டமைப்பு வசதிகளும், போதுமான ஊழியர்களும் அமையப் பெற்றால் திருப் பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நோயாளிக ள் உலகத் தரமான சிகிச்சைகள் பெற முடியும்.