தினகரன் 31.12.2013
ஆத்தூர் பஸ் ஸ்டாண்டில் ரூ1.50 கோடியில் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை
ஆத்தூர், : ஆத்தூர் நகராட்சி 9வது வார்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் இயங்கி வருகிறது. சேலம்-சென்னை மார்க்கத்தில் செல்லும் அனைத்து பஸ்களும் இங்கு வந்து செல்வதால் இந்த பஸ் ஸ்டாண்ட் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த பஸ் ஸ்டாண்ட் வளாகம் குண்டும், குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன.
இதனையடுத்து பஸ் ஸ்டாண்டின் உட்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என ஆத்தூர் எம்எல்ஏ, நகர்மன்ற தலைவர் ஆகியோருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து நகரமன்ற தலைவர் உமாராணியின் முயற்சியால் அரசிடம் இருந்து ரூ1.50 கோடி நிதி பெறப்பட்டு, பணிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பஸ் ஸ்டாண்டின் உட்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் எம்எல்ஏ மாதேஸ்வரன், நகரமன்ற தலைவர் உமாராணி ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் துணைத்தலைவர் மோகன், ஆணையாளர் (பொ) ஜெகதீஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள் முஸ்தபா, ராமலிங்கம், குணசேகரன், நாகராஜ், அதிமுக நகர துணைச் செயலாளர் ராஜேந்திரகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.