தினகரன் 14.12.2013
பயணிகள் காத்திருப்பு அறைகளுடன் ரூ2.5 கோடியில் நவீனமாகிறது மேட்டுப்பாளையம் பஸ்நிலையம்
மேட்டுப்பாளையம், : பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ள மேட்டுப்பாளையம் நகராட்சி பஸ்நிலையத்தில் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவு இல்லாமல் உள்ளது.
எனவே இந்த பஸ்நிலையத்தை ரூ.2.5 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இந்த திட்டத்தின் கீழ், மேட்டுப்பாளையம் பஸ்நிலையத்தில் கோவை, திருப்பூர், சத்தியமங்கலம், ஈரோடு பஸ்நிறுத்தம் பகுதியில் உள்ள தார் சாலைகளை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக புதிய பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட உள்ளது. பழைய கழிப்பறைகளை இடித்து விட்டு புதிதாக நவீன வசதியுடன் கழிப்பறைகள் கட்டப்படும்.
பொருள் வைப்பறை, ஆண், பெண் பயணிகள் காத்திருப்பு அறை, பெண்களுக்கு தனியாக காத்திருப்பு அறை சகல வசதிகளுடன் புதிதாக கட்டப்பட இருக்கிறது. மேலும் அனைத்து கட்டிடங்களும் பழுது பார்க்கபட்டு மேல் பகுதியில் டைல்ஸ் ஒட்டப்பட உள்ளது.
இந்தப் பணிகள் துவக்க விழா நேற்று நடைபெற்றது. நகரமன்ற தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். ஆணையாளர் இளங்கோவன், துணைத்தலைவர் ரமாசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பணியை எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, வெள்ளிங்கிரி, உசேன், சூரியபிரகாஷ், நாகஜோதி, மோகன்ராஜ், தனபாக்கியம், ராதா, ஜெகநாதன், மகேந்திரன் மற்றும் நகராட்சி மேலாளர் சித்தார்த், துப்புரவு ஆய்வாளர்கள் செல்வராஜ், செந்தில்குமார், அதிமுக நகர செயலாளர் வான்மதி சேட், மாணவர் அணி மாவட்ட செயலாளர் நாசர், சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் உதவி பொறியாளர் சண்முகவடிவு நன்றி கூறினார்.
மேலும் 6, 7வது வார்டுகளில் ரூ.22 லட்சத்தில் நவீன கழிப்பறை, வெள்ளிபாளையம் ரோட்டில துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.70 லட்சத்தில் 8 வீடுகள் கட்டவும் இந்த விழாவில் அடிக்கல் நாட்டப்பட்டது.