தினகரன் 12.12.2013
புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா
திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சி 59வது வார்டுக்கு உட்பட்ட சின்னாண்டிபாளையத்தில் கோவை பாராளுமன்ற உறுப் பினர் நிதியில் இருந்து ஒதுக்கிய ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிட திறப்பு விழா நடந்தது.
விழாவுக்கு கவுன்சிலர் வசந்தாமணி வரவேற்றார். கோவை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நடராஜன் ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். திருப்பூர் மேயர் விசாலாட்சி, ஆண்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பழனிச்சாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள்.
மேயர் விசாலாட்சி பேசுகையில் ‘தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி திருப்பூரில் உள்ள 60 வார்டுகளையும் ஒருங்கிணைத்து மாநகராட்சியாக மாற்றப்பட்ட 2 ஆண்டுகளில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
ஊராட்சியாக இருந்த பல பகுதிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு ஏற்கனவே நகராட்சி பகுதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் திட்டங்கள் நிறை வேற்றப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதிகளின் நிதி மூலமாக குறிப்பாக 59வது வார்டு பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.2 கோடியே 85 லட்சத்து 23 ஆயிரம் ஒதுக்கப்பட்டு, அதில் ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பிலான பணிகள் முடிவடைந்துள்ளன’ என்றார்.