தினகரன் 18.05.2010
ஆளுநர் உத்தரவை மீறி கட்டிய கட்டிடங்களைதான் இடிக்கிறோம்
புதுடெல்லி,மே 19: கால அவகாசத்தையும், ஆளுநர் உத்தரவையும் மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மட்டுமே இடிக்கப்படுகின்றன’என்று டெல்லி மேம்பாட்டு ஆணையம் கூறியுள்ளது.
அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணியில் டெல்லி மேம்பாட்டு ஆணையம் ஈடுபட்டுள்ளது. வசந்த் கஞ்ச், ஜெயித்பூர் ஆகிய பகுதிகளில் மட்டும் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 500 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது.
எனவே இந்த நடவடிக்கை பற்றி டெல்லி மேம்பாட்டு ஆணையம் நேற்று வெளியிட்ட அறிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:
டெல்லியில் 2007 பிப்ரவரி மாதம் 7 ம் தேதிக்கு பிறகு அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை மட்டுமே மேம்பாட்டு ஆணையம் இடித்து வருகிறது. அதற்கு முன்னதாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கவில்லை.
இந்த கட்டிடங்களை இடிக்கும் முன்னதாக அதற்கான ஒப்புதலை ஆளுநர் தேஜேந்திர கன்னாவிடம் இருந்து எழுத்து மூலமாக வாங்கிய பிறகே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2007 ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதிக்கு பிறகு நகரின் பல்வேறு இடங்களில் அங்கீகாரம் இல்லாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட கட்டிடங்களை வளர விடாமல் ஆரம்பத்திலேயே இடித்து தள்ளும்படி ஆளுநர் தேஜேந்திர கன்னா உத்தரவிட்டுள்ளார். அதைத்தான் மேம்பாட்டு ஆணைய் செய்து வருகிறது.இந்த அனுமதியை நிதி அமைச்சர் ஏ.கே. வாலியா பெற்று வந்தார்.
நகரில் மேம்பாட்டு ஆணையத்துக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை சில தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி விற்க தொடங்கி விட்டன. அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் அதையும் மீறி சில இடங்களில் வீடுகள் கட்டி விற்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டுமானால் 2007 ம் ஆண்டு பிப்ரவரிக்கு பின் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து தள்ளலாம்’ என்ற டெல்லி நகர சட்டத்தை பயன்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.