Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"விதிமீறிய கட்டடங்கள் மீது கரிசனம் கூடாது' குன்னூர் நுகர்வோர் சங்கம் "காட்டம்'

Print PDF

தினமலர்   21.05.2010

"விதிமீறிய கட்டடங்கள் மீது கரிசனம் கூடாது' குன்னூர் நுகர்வோர் சங்கம் "காட்டம்'

குன்னூர்: "நீலகிரியில் தொடர்ந்து விதிமீறிய கட்டடங்கள் கட்டப்படுவதை தவிர்க்க, விதிமீறிய கட்டடங்கள் மீது கோர்ட் வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாஸ்டர் பிளான் சட்டம் குறித்த அரசின் நிலைபாட்டை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்' என, குன்னூர் நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவின் படி, நீலகிரியில் விதிமீறி, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் மீதான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட, விதிமீறி கட்டடம் கட்டியோர், வீதிக்கு வந்து போராடினர். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க, அரசின் கவனம் மாவட்டத்தின் மீது திரும்பியது. இதற்கிடையில், கட்டட விவகாரம் தொடர்பாக குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில், அதன் செயலர் சபாபதி, காட்டமான கடிதத்தை துணை முதல்வருக்கு அனுப்பியுள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது: மலை மாவட்டத்தின் தனித்தன்மையை உணர்ந்து, தொலைநோக்குடன் செயல்பட்டதால் குடியிருப்புப் பகுதி, மேய்ச்சல் நிலம், நீராதாரம், சோலைக் காடுகள் என பிரித்து, எஞ்சியப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி, அதற்குள்ளேயே தோட்ட தொழிலாளர்களுக்கான குடியிருப்புகளை அமைத்து, மாவட்டத்தின் இயற்கை வளத்தை பாதுகாத்தனர் ஆங்கிலேயர்கள். சுதந்திரத்துக்கு பின் வந்த அரசுகள் தொலைநோக்கு பார்வை இல்லாமல், மாவட்டத்தின் தனித்தன்மையை உணராமல், மாவட்ட மக்களை வாக்கு வங்கியாகவே கருதி செயல்பட்டதால், கண்மூடித்தனமான குடியேற்றம், வணிக ரீதியிலான சுற்றுலா பெருகியது; மலை மாவட்டம் கான்கிரீட் காடுகளாக மாறின; நீராதாரம், வனங்கள் அழிக்கப்பட்டன.

இதை கருத்தில் கொண்டே 1993ல் மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது; சட்டத்தைப் பற்றி நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறின. சட்டத்தில், நடைமுறைக்கு ஒத்துவராத பல அம்சங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கட்டடங்கள் கட்டப்பட்டன.

உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், சட்டத்தில் உள்ள கடுமையை சாதகமாக்கி, பெரும் தொகையை லஞ்சமாக வாங்கி, கட்டடம் கட்ட அனுமதியளித்தனர்; இதன் மூலம் அவர்கள் கோடீஸ்வரர்களாக மாறினர். கட்டட விவகாரத்தில் பேரம் பேசி செழித்தவர்கள், தற்போது கட்டட விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு விட்டதால், வேறு வழியின்றி மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றனர்.

நீலகிரியில் சோலைக் காடுகள், மலைக் குன்றுகள், நீராதாரங்கள், சரிவுகள் உள்ள இடங்கள் தவிர, குறிப்பிட்ட சில இடங்களே வீடு கட்ட உகந்தவை. தற்போதுள்ள ஏழு லட்சத்துக்கும் அதிகமான மக்களை தாங்கும் ஆற்றல் மலை மாவட்டத்துக்கு இல்லை; மேலும் கட்டடம் கட்ட அனுமதிப்பது, நீலகிரியின் அழிவுக்கு வித்திடும்.

வெறும் எச்சரிக்கை, அறிவுவரையால் மட்டும் வீதிமீறல்கள் தொடர்வதை தடுக்க முடியாது. மாறாக, விதிமீறிய கட்டடங்களுக்கு அனுமதியளித்த அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலம், சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற வேண்டும்.

விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது கோர்ட் வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஸ்டர் பிளான் சட்டம் குறித்த அரசின் நிலைபாட்டை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இவ்வாறு, சபாபதி கூறியுள்ளார்.

கேள்விக்கு என்ன பதில்? விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறுவது குறித்து, துணை முதல்வரிடம் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கேட்டுள்ள விளக்கம்; இந்தியாவின் பிற மாநிலங்களை சேர்ந்த பணக்காரர்கள், நீலகிரியில் உள்ள தேயிலைத் தோட்டம், விளை நிலங்களை லட்சக்கணக்கில் விலை கொடுத்து வாங்குகின்றனர். குறிப்பாக, நீராதாரம் உள்ள இடங்களை தேர்ந்தெடுத்து வாங்கும் அவர்கள், நவீன இயந்திரம் மூலம் மலையை குடைந்து சாலை அமைக்கின்றனர்; மலைகளின் உச்சியில் வீட்டு மனைகளை உருவாக்குகின்றனர்.

* இவ்வாறு அமைக்கப்பட்ட கட்டடங்கள் முறையான அனுமதி பெற்றவையா?
* நிலநடுக்க அபாயம் உள்ள நீலகிரியில், நவீன இயந்திரங்களை கொண்டு மலையை குடைந்து சாலை அமைக்க, கட்டடம் கட்ட புவியியல் துறை , மண்வளத் துறை, சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு துறை அனுமதிக்கின்றனவா?
* நீலகிரியில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவில், கட்டக்கூடாத இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் பாதிக்கப்படுவதும், அவற்றை சீரமைக்க மக்களின் வரிப்பணத்தை அரசு வாரி வழங்குவதும் ஏற்புடையதா?
* குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் கட்டடம் கட்ட தடையுள்ள போதும், குன்னூர், ஊட்டியில் பூமிக்கு அடியில் (அண்டர் கிரவுண்டு) கட்டடம் கட்டப்படுவது எப்படி?