தினகரன் 02.06.2010
அங்கீகாரம் பெறாத மனைகளை வாங்காதீர்: நகராட்சி எச்சரிக்கை
ஈரோடு, ஜூன் 2: காசிபாளையம் நகராட்சி பகுதியில் அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளை பொதுமக்கள் வாங்கி ஏமாற வேண்டாம் என்று நகராட்சி எச்சரித்துள்ளது.காசிபாளையம் நகராட்சி செயல் அலுவலர் பழனிச்சாமி இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது: காசிபாளையம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அங்கீகாரம் பெறாமல் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மனைப்பிரிவுகளில் மனைகள் வாங்கினாலோ, விற்கப்பட்டாலோ நகராட்சி சட்டவிதிகளின்படி செல்லத்தக்கதல்ல. அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் வாங்கும் மனைகளுக்கு நகராட்சியின் மூலம் எந்த விதமான வரைபட அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது. மேலும் அந்த பகுதிகளில் நகராட்சி சார்பில் எவ்வித வளர்ச்சி பணிகளும் செய்து கொடுக்கப்பட மாட்டாது, என்று தெரிவித்துள்ளார்.