தினமணி 11.06.2010
மனை ஒப்புதலுடன் கட்டட அனுமதி: உள்ளாட்சிகளுக்கு அதிகார பகிர்வு
திருநெல்வேலி, ஜூன் 10: ஜூன் 1ஆம் தேதி முதல் மனை ஒப்புதலுடன்கூடிய கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளாட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2010-2011ஆம் ஆண்டிக்கான மானியக் கோரிக்கை மீதான அறிவிப்புகளில் சென்னை பெருநகர் பகுதி நீங்கலாக
தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் 4 குடியிருப்புகள் அல்லது 4000 சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சிகளுக்கு அதிகார ஒப்படைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து உள்ளாட்சிகளுக்கும் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 49ன் கீழ் திட்ட அனுமதியும், பிற முழுமைத் திட்டம் அறிவிக்கப்படாத பகுதிகளில் அமையும் உள்ளாட்சிகளில் தொழில்நுட்ப அனுமதியும் அனைத்து விதிகளுக்கு உள்பட்டு சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகள் ஜூன் 1-ம் தேதி முதல் மனை ஒப்புதலுடன்கூடிய கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
அதாவது 4 குடியிருப்புகளுக்குள் மற்றும் 4000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கட்டடங்கள்.
2000 சதுர அடிக்குள் கட்டப்படும் வாகன நிறுத்துமிடத்துக்கான தரைதளம் மற்றும் முதல்தளம் கொண்ட வணிக கட்டடங்கள். இந்த கட்டடங்களுக்கு மனை ஒப்புதல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.