தினகரன் 11.06.2010
சென்னையில் ரூ.100 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள்
வேளச்சேரி, ஜூன் 11: சென்னை மாநகராட்சி சார்பில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் திட்டப் பணிகள் தொடக்க விழா தரமணி பஸ் நிலையம் அருகே நேற்று காலை நடந்தது. மாநகராட்சி இணை ஆணையர் ஆஷிஷ் சட்டர்ஜி தலைமை தாங்கினார். மழைநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் மதியழகன் வரவேற்புரை ஆற்றினார். திட்டப் பணிகளை தொடங்கி வைத்து மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
சென்னை மாநகராட்சி சார்பில் தரமணி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் சிமென்ட் சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து தரப்பட்டுள்ளது. மேலும் ‘குடிசைகள் இல்லா நகர திட்டத்தின்’ கீழ் குடிசைகள் அகற்றப்பட்டு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் செலவில் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட உள்ளது. பயனாளிகள் ரூ.13 ஆயிரம் மட்டுமே செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்க உள்ளது.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இப்பகுதிகளில் தற்போது துவக்கப்பட உள்ள மழைநீர் வாரிய கால்வாய் பணி ரூ.39 கோடியே 95 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளது. இதில் 13 பிரதான கால்வாய்கள் மற்றும் 45 உள்ளீட்டு கால்வாய்கள் 14 சேகரிப்பு கால்வாய்கள் உள்பட 30 கி.மீ. தொலைவுக்கு இந்தப் பணி நடக்க உள்ளது. இவ்வாறு மேயர் பேசினார்.