Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தெற்கு பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் ரூ.39.95 கோடியில் மழைநீர் கால்வாய் பணி துவக்கம்

Print PDF

தினமலர் 14.06.2010

தெற்கு பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் ரூ.39.95 கோடியில் மழைநீர் கால்வாய் பணி துவக்கம்

தரமணி: தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்பு பகுதிகளில் 39.95 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை மேயர் சுப்ரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.

மழைக்காலத்தில் தென்சென்னை பகுதியில் அடையாறு, தரமணி, வேளச்சேரி, விஜயநகர் உள்ளிட்ட பகுதிகள் மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் பகுதிகள். இதற்கு தீர்வாக தெற்கு பக்கிங்காம் கெனாலில் இணைக்கும் வகையில் மழைநீர் கால்வாய்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. அதன் பயனாக, சென்னை நகரில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் மெகா திட்டம் ஒன்றை சென்னை மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் தீட்டப்பட்டு அதற்கான பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்பு பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் கட்டுமானப் பணிகள் நேற்று துவங்கியது.

மேயர் சுப்ரமணியன் நேற்று அப்பணிகளை துவக்கி வைத்து பேசியதாவது: மத்திய அரசின் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தில் ரூ.1447.91 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதல் பெறப்பட்டது. இதன்படி சென்னை மாநகராட்சி ரூ.814.88 கோடியிலும், பொதுப்பணித்துறை ரூ.633 கோடியிலும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல்வர் கருணாநிதி கடந்த வாரம் பொதுப்பணித்துறைக்கான பணிகளை துவக்கி வைத்தார். தற்போது, சென்னை மாநகராட்சியும், பொதுப்பணித்துறையும் இணைந்து தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்பு பகுதியில் ரூ.278.85 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்பு பகுதியில் 13 பிரதான கால்வாய்கள் 9.13 கி.மீ., நீளத்திற்கு ரூ.16.49 கோடியிலும், 45 உள்ளூட்டு கால்வாய்கள் 17.72 கி.மீ., நீளத்திற்கு ரூ.3.14 கோடியிலும் என சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.39.95 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் இன்று முதல் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோல, பொதுப்பணித்துறை மூலம் தெற்கு பங்கிங்காம் கால்வாய் அகல மற்றும் ஆழப்படுத்தி அடையாறு முதல் ஒக்கியம் மடுவு வரை10.50 கி.மீ., நீளத்திற்கு ரூ.78.13 கோடி செலவிலும், வேளச்சேரி பஸ் நிலையம் முதல் தெற்கு பங்கிங்காம் கால்வாய் வரை 4.10 கி.மீ., நீளத்திற்கு இணைப்பு கால்வாய் ரூ.58.15 கோடியிலும் என பொதுப்பணித்துறை சார்பில் ரூ.236.90 கோடியில் பணிகள் மேற்கொள்ப்படுகின்றன. இந்த வகையில் சென்னை மாநகராட்சியும், பொதுப்பணித்துறையும் இணைந்து ரூ.276.85 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 158 கி.மீ., நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக சமீபத்தில் 18 செ.மீ., மழை பெய்த போது தண்ணீர் தேங்கவில்லை. இவ்வாறு மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இணை கமிஷனர் (பணிகள்) ஆஷிஷ் சாட்டர்ஜி, துணை மேயர் சத்தியபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.