தினமலர் 17.06.2010
ரூ.29.99 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால்வாய் பணி துவக்கம்
ராயபுரம் : மழை வெள்ள பாதிப்பை தவிர்க்கும் வகையில் ராயபுரம் பகுதியில், வடிகால்வாய் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.
பருவ மழைக்காலங்களில் வடசென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்படும். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சென்னை மாநகராட்சியால் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், ராயபுரம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, 29.99 கோடி ரூபாய் மதிப்பில் 21.40 கி.மீ., நீளத்திற்கு மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட உள்ளது.
இதில் பிரதான கால்வாய்கள் 5 (4.19 கி.மீ.,நீளம்), உள்ளூட்டு கால்வாய்கள் 38 (15.11 கி.மீ., நீளம்), சேமிப்பு கால்வாய்கள் 12 (2.10 கி.மீ., நீளம்) என அமைய உள்ளன. இத்திட்டத்தின் மூலம் புதுமனைக்குப்பம், திடீர் நகர், சிங்கார வேலர் நகர், பழைய, புதிய அமராஞ்சிபுரம், கரிமேடு காலனி, ஏழுகிணறு, பிராட்வே, முத்தியால் பேட்டை உள்ளிட்ட பல பகுதிகள் பயன்பெறும். கால்வாய்கள் திட்டப்பணியை சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் நேற்று ராயபுரம் செயின்ட் சேவியர் தெருவில் துவக்கி வைத்தார். அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.