தினகரன் 21.06.2010
வீடுகளில் மழை நீர் சேமிப்பு கட்டாயம்
பெங்களூர், ஜூன் 21: பெருநகர் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் வீடுகளில் மழை நீர் சேமிப்பு தொட்டி கட்டாயமாக அமைக்க சட்டம் கொண்டுவரப்படும் என்று நகரவளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
பெங்களூர் ராஜாஜிநகர் சட்டப்பேரவை தொகுதியில் மழை நீர் சேமிப்பு குறித்து 60 நாட்கள் விழிப்புணர்வு முகாம் நேற்று முடிந்தது.
இதன் நிறைவு விழாவில் பங்கேற்று அமைச்சர் பேசியதாவது: மழைநீர் சேமிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் திட்டம் பள்ளி மாணவர்களை கொண்டு தொடங்கப் பட்டது. ராஜாஜிநகர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட முயற்சி முழு வெற்றி கொடுத்துள்ளது.
புதிய வீடு கட்டுபவர்கள் மட்டுமல்லால், பழைய வீடுகளில் இட வசதி உள்ளவர்கள் தானாக முன்வந்து மழை நீர் சேமிப்பு தொட்டி அமைத்துள்ளனர்.
இயற்கை கொடுக்கும் தண்ணீரை வீணாக்காமல் பயன்படுத்தினால், எதிர்க்கால சந்ததி சிறப்பாக இருப்பதுடன், நிலத்தடி நீரின் அளவு உயரும். இதன் மூலம் பூமீ வெப்பமயமாவதை தடுக்க முடியும்.
இதுபோன்ற நல்ல பணிகளை சட்டம் போட்டு செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை. சமூக பற்றுள்ள ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து செயல்படுத்த வேண்டும்.
மழை நீர் சேமிப்பு திட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் மாநகராட்சியில் உள்ள கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் வீடுகளில் கட்டாயம் மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விரைவில் மாநகராட்சி மூலம் சட்டம் கொண்டுவரப்படும்.
இதை தொடர்ந்து அரசு துறை யில் பணியாற்றுவோர் உள்பட அனைவருக்கும் பொருந்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.