தினகரன் 20.07.2010
அனுமதி பெறாத கட்டடம் இடிப்பு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
கோவை, ஜூலை 20:கோவை மாநகரில் அனுமதியற்ற முறையில் கட்டப்பட்ட 6 ஆயிரம் சதுர அடி கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடியாக இடித்து அகற்றினர்.
கோவை ஒப்பணக்காரவீதியைச் சேர்ந்தவர் மஹிபால். இவர் ஆர்.எஸ்.புரம் மேற்கு பொன்னுரங்கம் சாலையில் அபார்ட்மென்ட் கட்டி வருகிறார். இதற்குமுன் உள்ள காலியிடத்தில் மாநகராட்சியிடம் அனுமதி வாங்காமல் 3 மாடி கட்டடத்தை கட்டி வந்துள்ளார். அனுமதி பெறாமல் கட்டப்பட்டதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் இக்கட்டடத்தை 3 மாதங்களுக்கு முன் இடித்தனர்.
இந்நிலையில் அதே இடத்தில் அனுமதி வாங்காமல் மீண்டும் 3 மாடி கட்டடத்தை கட்டியுள்ளார். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. மாநகராட்சி கமிஷனர் அன்சுல்மிஸ்ரா உத்தரவின்பேரில் மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் கட்டடத்தை இடித்தனர்.
மாநகராட்சி உதவி நகரமைப்பு பிரிவு அதிகாரி ரவிச்சந்திரன் கூறுகையில், ‘இங்குள் காலியிடத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டம் கட்டியிருந்தனர். அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடத்தை இடித்தோம். அதே இடத்தில் மீண்டும் அனுமதி எதுவும் பெறாமல் கட்டடம் கட்டி வந்துள்ளனர். 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட கட்டடத்தை மீண்டும் இடிக்கிறோம். அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடம் இடிப்பு பணி தொடரும்’ என்றார்.