தினகரன் 22.07.2010
மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மாநகராட்சியின் 3 பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது
சென்னை, ஜூலை 22: மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தும் பகுதியில் உள்ள 3 பூங்காக்கள் தற்காலிமாக 3 ஆண்டுகளுக்கு மூடிவைக்கப்படவுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரூ600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டத்தை 3 பகுதியாக பிரித்து தமிழக அரசு நிறைவேற்றவுள்ளது. இந்த திட்டத்தின்படி வண்ணாரப்பேட்டை& விமான நிலையம் (வழி:அண்ணாசாலை) வரை ஒரு பகுதி, சென்ட்ரல்&பரங்கிமலை (வழி: ஈவெரா பெரியார் சாலை) வரை ஒரு பகுதி என இந்த இரண்டு பகுதியிலும் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
இந்த 2 திட்டங்கள் நிறைவேற்றப்படும் இடத்தில் மே தின பூங்கா (சிந்தாதிரிப்பேட்டை), நேரு பூங்கா (கீழ்ப்பாக்கம்), திருவிக பூங்கா (அண்ணாநகர் கிழக்கு) உள்ளன. இந்த 3 பெரிய பூங்காக்களை மாநகராட்சி பராமரித்து வருகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்தி முடிக்கும் வரை இந்த 3 பூங்காக்களையும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு வைத்துக்கொள்ள தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள் ளது.
இந்த 3 பூங்காக்களும் 3 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக மூடப்படும். மெட்ரோ ரயில் பணி முடிந்த பிறகு மாநகராட்சியிடம் அந்த பூங்காக்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்.
சுமார் 8.84 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள திருவிக பூங்கா, 2.54 ஏக்கரில் உள்ள நேரு பூங்காவை மெட்ரோ ரயில் நிறுவனமே மீண்டும் புதுப்பித்து மாநகராட்சியிடம் ஒப்படைக்கும். மேலும் இந்த இடங்களை பயன்படுத்தியதற்கான குத்தகை தொகையையும் மாநகராட்சிக்கு வழங்கும்.
அதுபோலவே, மே தின பூங்காவையும் மீண்டும் புதுப்பிப்பதற்கான தொகையை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கும்.