Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

4 மணி நேரத்தில் மழைநீர் வடிய 1,400 கோடி ரூபாயில் மெகா திட்டம்

Print PDF

தினமலர் 26.07.2010

 4 மணி நேரத்தில் மழைநீர் வடிய 1,400 கோடி ரூபாயில் மெகா திட்டம்

சென்னை : சென்னைவாசிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் மழை வெள்ள நீரை, நான்கு மணி நேரத்தில் வடிந்தோடி கடலில் கலக்கச் செய்ய, 1,400 கோடி ரூபாய் செலவில், மழைநீர் வடிகால், கால்வாய்கள் அமைக்கும் பணி, "ஜரூராக' நடந்து வருகிறது.சென்னையின் சராசரி மழையளவு 1,300 மில்லி மீட்டர். 60 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத நிலையாக, 2005ம் ஆண்டு 2,570 மி.மீ., மழை பெய்தது.இதனால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது.பாதிப்புகளை சீர் செய்ய, நிவாரணம் வழங்க பல கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலையில், நிரந்தர தீர்வுக்கு திட்டமிடப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் கீழ் வரும் சிறிய மழைநீர் வடிகால் மற்றும் பொதுப்பணித் துறையின் பராமரிப்பின் கீழ் வரும் பெரிய வடிகால் மற்றும் நீர்வழித் தடங்களை ஒருங்கிணைத்து,சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.சென்னையில் உள்ள 12 வடிநிலங்களை வடக்கு, தெற்கு, கிழக்கு, மத்திய பகுதி என நான்காகப் பிரித்து 1,444.91 கோடி ரூபாயில் நான்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. 2008 டிசம்பரில், உள்ளாட்சி துறை அமைச்சர் தலைமையில் நடந்த எட்டாவது மாநில வழிகாட்டி குழுக் கூட்டத்தில் இந்தத் திட்டம், மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் இந்தத் திட்டத்தை மத்திய ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டக் கமிஷனுக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்றது. பொதுப்பணித் துறைக்கு 633.03 மற்றும் மாநகராட்சிக்கு 814.88 கோடி ரூபாய் எனப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

மாநகராட்சி, தான் பெற்ற நிதியில் இருந்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை 70 சதவீதத்திற்கும் மேல் முடித்துள்ளது. கடந்த மே மாதம் தமிழக முதல்வர் கருணாநிதி, இந்த திட்டத்தை துவக்கி வைத்தார். 2012-13ம் நிதியாண்டுக்குள் இது நிறைவடையும். திட்டங்கள் குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் விஜயகுமார், மகேஸ்வரன், ஜெயபிரகாஷ் கூறியதாவது:சென்னைக்குள் தேங்கும் மழைநீரை வடிகால் மற்றும் கால்வாய்கள் வழியாக கடலுக்குள் கொண்டு செல்வது தான் திட்டத்தின் நோக்கம்.மழைக்குப் பின் ஒரு வாரமானாலும் மழைநீர் தேங்கி, இயல்பு வாழ்க்கையை பாதித்து வரும் நிலையில், சில மணி நேரத்திலேயே மழை நீரை கடலுக்குள் கொண்டு செல்ல முடியும்.சென்னையில் மிகப் பெரிய அளவில் மழைநீர் தேங்கும் பகுதியாக வேளச்சேரி உள்ளது. வேளச்சேரி, புழுதிவாக்கம், உள்ளகரம், மூவரசம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழைநீர், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு கொண்டு சென்று, அங்கிருந்து பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலுக்குள் விடப்படும்.வீராங்கல் ஓடையை மேம்படுத்தி வெள்ளத் தடுப்புச் சுவர் அமைத்தல், வேளச்சேரி ஏரி உபரி நீரை பக்கிங்காம் கால்வாய்க்கு திருப்ப புதிய இணைப்புக் கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன.தெற்கு பக்கிங்காம் கால்வாயின் வெள்ள நீரை ஒக்கியம் மடுவில் இருந்து கடலுக்குத் திருப்ப, புதிதாக நேர்வெட்டுக் கால்வாய் அமைக்கப்படுகிறது. பக்கிங்காம் கால்வாயை 100 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.அம்பத்தூர் ஏரியில் இருந்து வரும் உபரி நீரை தொழிற்பேட்டை வழியாக கொரட்டூர் கால்வாய்க்கு கொண்டு செல்லுதல், கொளத்தூர் ஏரி உபரி நீரை வெளியேற்ற புதிய கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகளும் துவங்கியுள்ளன.விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாயில் இருந்து கூவம் ஆற்றிற்கு புதிய நேர்வெட்டுக் கால்வாய் அமைத்தல், கால்வாயை மேம்படுத்துதல் ஆகிய பணிகளும் நடந்து வருகின்றன.கோயம்பேடு நூறடி சாலை வழித் தடத்தில், நான்கு மீட்டர் அகலத்தில் 2.34 கிலோ மீட்டர் நீளத்தில் மழைநீர் கால்வாய் அமையும். இவை நிலத்தடியில் நீரைக் கடத்திச் செல்லும் வழித்தடமாக இருக்கும். 2013க்குப் பிறகு சென்னைக்குள் மழை நீர் தேங்கும் சூழ்நிலை இருக்காது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்பும், நில ஆர்ஜிதமும் : சென்னை மற்றும் புறநகரை வெள்ள நீரில் இருந்து காப்பாற்றுவதில் கூவம் ஆறு, அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவை பெரும் பங்காற்றி வருகின்றன.நீர்வழித் தடங்களில் ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு, அவற்றை அப்புறப்படுத்தி மீண்டும் ஆக்கிரமிக்காமல் காப்பது அவசியம். இந்த புதிய திட்டத்திற்காக நில ஆர்ஜிதம் செய்யவும், அதற்கான இழப்பீடு வழங்கவும் உள்ளனர். மின் வாரியத்திற்கு 11.40 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது.அரும்பாடுபட்டு உருவாக்கும் இந்த திட்டம், மீண்டும் ஆக்கிரமிப்பின் பிடியில் போகாமல் இருக்க வேண்டும்.

Last Updated on Monday, 26 July 2010 05:57