தினகரன் 28.07.2010
14 மாடி குடியிருப்பு டி.எம்.ஆர்.சி. திட்டத்துக்கு எதிர்ப்பு
புதுடெல்லி, ஜூலை 28: டெல்லி பல்கலைக்கழகத்துக்கு அருகே 14 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுக்கிறது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு பகுதியில் டி.டி.ஏ.க்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இட த்தை வாகன நிறுத்தும் இடமாக மெட்ரோ ரயில் நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த இடத்தில் 14 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட மெட்ரோ ரயில் நிறுவனம் (டி.எம்.ஆர்.சி.) முடிவு செய்துள்ளது.
டி.எம்.ஆர்.சி.யின் இத்திட்டத்துக்கு ஏற்கனவே பல்கலைக்கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் பல்கலைக்கழகத்தின் முகப்பு மறைக்கப்படுவதுடன், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று துணைவேந்தர் தீபக் பென்டால் கூறியிருந்தார். இந்நிலையில், டி.எம். ஆர்.சி.யின் திட்டத்துக்கு டெல்லி நகர்ப்புற கலைகள் கமிஷனும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அது கேட்டுக் கொண்டுள்ளது.