Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அங்கீகரிக்கப்படாத கட்டடங்களை இடிக்க தடை: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

Print PDF

தினமலர் 29.07.2010

அங்கீகரிக்கப்படாத கட்டடங்களை இடிக்க தடை: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

சென்னை : சி.எம்.டி.., விதிமுறைகளுக்கு மீறி கட்டப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களை இடிப்பதற்கான தடையை, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தரை தளம் மற்றும் முதல் மாடி வரை கட்டிக் கொள்ள சென்னை மாநகராட்சி மற்றும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற வேண்டும். முதல் மாடிக்கு மேல் பல மாடிக் கட்டடங்களைக் கட்டிக் கொள்வதற்கான திட்ட அனுமதியை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் பெற வேண்டும். திட்ட அனுமதி பெற்று அதை மீறுவதும், திட்ட அனுமதி பெறாமல் கட்டடங்களை கட்டிக் கொள்வதுமான விதிமீறல்களை சி.எம்.டி.., கண்காணித்து, நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னை நகரின் மாபெரும் விரிவாக்கம் காரணமாக, விதிமீறல்கள் கட்டுக்கடங்காமல் போனது. அவற்றை ஒழுங்குமுறைப்படுத்த சி.எம்.டி.., திட்டமிட்டது. குறிப்பிட்ட சில அனுமதிகளை தரும் பொருட்டு, தனது வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும் முன்வந்தது. விதிமீறல் கட்டடங்களில் சதுரடிக்கு குறிப்பிட்ட கட்டணத்தை நிர்ணயித்து, அனுமதி தந்தது.

கடந்த 2000, 2001 மற்றும் 2002ம் ஆண்டுகளில் சி.எம்.டி..,வின் இந்த நடவடிக்கை காரணமாக 250 கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் வந்தது. திட்ட அனுமதி பெறாமல் கட்டியோர், திட்ட அனுமதியை மீறியோர் எனப் பலரும் சி.எம்.டி..,வின் இந்த நடவடிக்கைக்கு கட்டுப்பட முன்வந்தனர். இந்நிலையில், இந்த ஒழுங்குமுறை சரியல்ல என்று கூறி, இந்த நடவடிக்கைக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முடிவில், கண்காணிப்பு குழு ஒன்றை ஐகோர்ட் நியமித்தது. வரன்முறைக்கு வந்த விண்ணப்பங்களை கண்காணிப்புக் குழு ஆய்வு செய்தபோது, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களை இடிக்க வேண்டிய சூழல் எழுந்தது. இதனால் வணிகர்கள், சிறு வியாபாரிகள், குடியிருப்போர் என கடும் பாதிப்பு மற்றும் ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்பதால், 2007ல் தமிழக அரசு சிறப்பு நிபந்தனைகளுடன் கூடிய ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதேநேரத்தில், 2007, ஜூலை 27க்கு பிறகு கட்டப்படும் கட்டடங்களை இந்த நிபந்தனை கட்டுப்படுத்தாது என்றும் தெளிவுபடுத்தியது. கடந்த 2008ல் இந்த சட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அதே போல், 2009திலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது நேற்று முன்தினத்துடன் இந்த அவசர சட்டம் காலாவதியானது. இதையடுத்து, கட்டடங்களை இடிப்பதற்கான தடையை மேலும் ஓராண்டுக்கு, 2011ம் ஆண்டு ஜூலை வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.