தினகரன் 05.08.2010
கட்டட திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் மாவட்ட ஆட்சியர் தகவல்
சேலம், ஆக.5: கட்டட திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் சந்திரகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னை பெருநகர் பகுதி நீங்கலாக தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் நான்கு குடியிருப்புகள் அல்லது 4000 சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகார ஒப்படைப்பு வழங்கப்படும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, உள்ளூர் திட்டக்குழுமத்தின் கீழ் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கும் நகர் ஊரமைப்புச் சட்டம் 1971ன் கீழ் திட்ட அனுமதியும், பிற முழுமைத் திட்டம் அறிவிக்கப்படாத பகுதிகளில் அமையும் உள்ளாட்சிகளில் தொழில்நுட்ப அனுமதியும் வழங்கப்படுகிறது. பின்வரும் விதிகளுக்கு உட்பட்டு 1.6.2010 முதல் மனை ஒப்புதலுடன் கூடிய கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
அதன்படி, நான்கு குடியிருப்புகள் மற்றும் 4000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கட்டடங்கள், 2000 சதுர அடிக்குள் கட்டப்படும் தரை மற்றும் முதல் தளம் கொண்ட வணிக கட்டடங்களுக்கு மனை ஒப்புதல் வழங்கலாம்.
அனுமதியற்ற மனைப்பிரிவில் எவ்வித மனை ஒப்புதலோ, கட்டட அனுமதியோ அனுமதிக்கக் கூடாது.மேற்படி அதிகார வரம்பு மற்றும் பரப்பிற்குள் அனுமதி வழங்கப்பட்டு, அதே மனையில் கூடுதல் கட்டடம் கட்ட விண்ணப்பம் பெறப்படின், பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகார பரப்பிற்குள் இருந்தாலும் உள்ளாட்சியால் அனுமதி வழங்க இயலாது. அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.