தினகரன் 10.08.2010
அங்கீகாரமற்ற குடியிருப்புகளுக்கு நிம்மதி மனை, தள அளவு உயர்கிறது அமைச்சரவை பரிந்துரை
புதுடெல்லி, ஆக. 10: அங்கீகாரமற்ற குடியிருப்பு பகுதிகளுக்கு விமோசனம் அளிக்கும் வகையில், மனை, தள அளவை உயர்த்தி மத்திய அரசுக்கு மாநில அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.
மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதியமைச்சர் ஏ.கே.வாலியா கூறியதாவது:
டெல்லியில் 1,639 குடியிருப்புகள் அங்கீகாரம் இல்லாமல் உள்ளன. இதற்கு முக்கிய காரணம், இவற்றின் மனை மற்றும் தள அளவு மாறுபாடுகள்தான். இதனால் அங்கீகார சான்றிதழ் பெற முடியாமல் இருக்கின்றன. இவற்றுக்கு விமோசனம் அளிக்கும் வகையில், நேற்றைய அமைச்சரவையில் மனை, தள அளவை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதன்படி, இப்போது 175 சதுர மீட்டர் மனையில், தள அளவு விகிதம் 250 ஆக இருப்பதை, 250 சதுர மீட்டர் மனையில் 350 முதல் 400 தள அளவாக உயர்த்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் நான்கு மாடிகள் வரை கட்டிக் கொள்ளலாம் என்றாலும், உயரம் 15 மீட்டர் என்ற அளவு தொடர்ந்து நீடிக்கும். 2007ம் ஆண்டுக்குள் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும்.
இதன் மூலம் லட்சக்கணக்கான வீட்டு உரிமையாளர்கள், அங்கீகாரம் இல்லாத தங்களது வீடுகளுக்கு அங்கீகாரம் பெற முடியும். மேலும், கட்டிடங்கள் இடிபடும் அபாயம் இல்லாமல் போகும்.
மெட்ரோ ரயில் பாதைகள் மற்றும் பி.ஆர்.டி. காரிடர் பகுதிகளில் கட்டப்பட் டுள்ள ஏராளமான குடியிருப்புகளுக்கு விமோசனம் கிடைக்கும்.
இந்த பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மத்திய அரசின் அனுமதிக்கு பின்னர் அது அரசாணையாக வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.