தினமணி 10.08.2010
பாதை வசதி இல்லாத இடங்களை வாங்கக் கூடாது: போடி ஆணையர்
போடி, ஆக. 9: போடியில் பாதை வசதி செய்யப்படாத பிளாட்களை பொதுமக்கள் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
போடி பரமசிவன் மலைக் கோயில் அடிவாரத்தில் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு செல்ல சுப்புராஜ் நகர், சுப்புராஜ் நகர் புதுக் காலனி வழியாக நகராட்சிக்கு மட்டும் சொந்தமான தனிப்பாதை உள்ளது. முன்பு இப்பகுதி தோட்டங்களாக இருந்தது. அப்போது நகராட்சிக்குப் பாதையை சில தனியார் தோட்ட உரிமையாளர்கள் பயன்படுத்தினர். தற்போது இந்தத் தோட்டங்கள் அழிக்கப்பட்டு மனையிடங்களாகப் பிரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் மனையிடங்களை விற்பனை செய்தவர்கள் உரிய பாதை வசதி செய்யாமல், நகராட்சிப் பாதையைக் காட்டி விற்பனை செய்து வருகின்றனர். நகராட்சிப் பாதையானது தனிப்பட்ட பாதை. இதனால் இவற்றை அடைத்துக் கொள்ள நகராட்சிக்கு உரிமை உள்ளது. எனவே இப்பகுதியில் மனையிடங்களை வாங்குபவர்கள் நகராட்சி அலுவலகத்தில் ஆவணங்களை சரிபாத்து வாங்க வேண்டும். இதன் மூலம் நில புரோக்கர்களிடம் ஏமாறாமல் தவிர்க்க முடியும். பின்னாளில் நிலப் பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கலாம். இத்தகவலை ஆணையர் க.சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.