தினகரன் 18.08.2010
வாலாஜாபாத்தில் மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை
வாலாஜாபாத், ஆக.18: கங்கை விநாயகர் கோயில் பின் தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வாலாஜாபாத் பேரூராட்சி 1வது வார்டில் கங்கை விநாயகர் கோயில் பின் தெரு உள்ளது. இது முட்டுச்சந்து. இங்கு, சில குடிசைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி பகுதியில் உள்ள சாலைகள் தார்ச்சாலைகளாக மாற்றப்பட்டன. ஆனால், கங்கை விநாயகர் கோயில் பின் தெருவில் சாலை அமைக்கவில்லை. வலம்புரி விநாயகர் கோயில் தெரு மக்கள் இந்த சாலை வழியாகதான் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் கங்கை விநாயகர் கோயில் பின் தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. குடிசைகளுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. வலம்புரி விநாயகர் கோயில் தெருவில் இருந்து வரும் மழைநீரும் கங்கை விநாயகர் கோயில் தெருவில்தான் தேங்குகிறது. இதனால், கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். 2 மாதங்களுக்கு முன் நடந்த பேரூராட்சி கூட்டத்தில் சிமென்ட் சாலை அமைப்பது பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் கங்கை விநாயகர் கோயில் பின் தெருவில் சிமென்ட் சாலை மற்றும் மழைநீர் செல்ல கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.