தினகரன் 24.08.2010
விருகம்பாக்கத்தில் மேயர் ஆய்வு கால்வாய் சீரமைப்பு பணி முடிந்ததும் மழைநீர் தேங்காது
சென்னை, ஆக. 24: மாநகராட்சியும், பொதுப்பணித்துறையும் இணைந்து சென்னை நகரில் மழைநீர் தேங்காமல் இருக்க கால்வாய்கள் சீரமைக்கும் பணிகளையும், புதிய மழைநீர் வடிகால்வாய்கள் கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றன. விருகம்பாக்கத்தில் நடந்து வரும் கால்வாய் சீரமைப்பு பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் மேயர் கூறியதாவது:
சென்னை நகர் முழுவதும் நில அளவை செய்யப்பட்டு, 4 நீர்த்தேக்கப் பகுதிகளாகவும், 12 நீர் பிடிப்பு பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி வேளச்சேரி நீர் பிடிப்பு பகுதி, கொளத்தூர் நீர் பிடிப்பு பகுதி, வடக்கு பக்கிங்காம் கால்வாய் நீர் பிடிப்பு பகுதி, மத்திய பக்கிங்காம் கால்வாய் நீர் பிடிப்பு பகுதி, மாம்பலம் மற்றும் நந்தனம் கால்வாய் நீர் பிடிப்பு பகுதி, தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர் பிடிப்பு பகுதி, ராயபுரம் நீர் பிடிப்பு பகுதி, கூவம் நீர் பிடிப்பு பகுதி ஆகிய 8 இடங்களில் பணி நடந்து வருகிறது. விருகம்பாக்கம், அரும்பாக்கம் கால்வாய் 6.34 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ83.89 கோடி செலவில் சீரமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகள் முடிந்தபின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேக்கம் இல்லாத நிலை ஏற்படும். இவ்வாறு மேயர் சுப்பிரமணியன் கூறினார்.