தினமணி 04.09.2010
கட்டட அனுமதி வழங்க உள்ளாட்சிகளுக்கு அதிகாரம்
விழுப்புரம், செப். 3: சென்னை பெருநகரம் நீங்கலாக ஏனைய பகுதிகளில் நான்கு குடியிருப்புகள் அல்லது 4,000 சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகார ஒப்படைப்பு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உள்ளூர் திட்டக் குழுமம், புதுநகர் வளர்ச்சிக் குழுமத்தின் கீழ் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கும் நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 49-ன் கீழ் திட்ட அனுமதியும், பிற முழுமைத் திட்டம் அறிவிக்கப்படாத பகுதிகளில் அமையும் உள்ளாட்சிகளில் தொழில்நுட்ப அனுமதியும், அனைத்து விதிகளுக்கு உள்பட்டு சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகள் மனை ஒப்புதலுடன் கூடிய கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இதில் 4 குடியிருப்புகளுக்குள் மற்றும் 4,000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கட்டடங்கள், 2,000 சதுர அடிக்குள் கட்டப்படும் தரைதளம் மற்றும் முதல் தளம் கொண்ட வணிக கட்டடம் மேற்படி கட்டடங்களுக்கு மனை ஒப்புதல்.
அனுமதியற்ற மனைப்பிரிவில் எவ்வித மனை ஒப்புதலோ, கட்டட அனுமதியோ அனுமதிக்கக் கூடாது.
மேற்படி அதிகார வரம்பு மற்றும் பரப்பிற்குள் அனுமதி வழங்கப்பட்டு, அதே மனையில் கூடுதல் கட்டடம் கட்ட விண்ணப்பம் பெறப்படின் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகார பரப்பிற்குள் இருப்பினும் உள்ளாட்சியால் அனுமதி வழங்க இயலாது.
அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்துக்கு, மண்டல துணை இயக்குநர் அலுவலகத்துக்கு சமர்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.