தினமணி 08.09.2010
கட்டட அனுமதியில் உள்ளாட்சிக்கு மேலும் அதிகாரங்கள்: ஆட்சியர்
மதுரை, செப்.7: கட்டட அனுமதியில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு மேலும் அதிகாரம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளது:
தமிழக சட்டப்ரேவையில் வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, உள்ளூர் திட்டக் குழுமம் புதுநகர் வளர்ச்சிக் குழுமத்தின் கீழ் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கும் நகர் ஊரமைப்புச் சட்டத்தின்கீழ் திட்ட அனுமதியும், பிற முழுமைத் திட்டம் அறிவிக்கப்படாத பகுதிகளில் அமையும் உள்ளாட்சிகளில் தொழில்நுட்ப அனுமதியும், அனைத்து விதிகளுக்கு உள்பட்ட சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகள் 1.6.2010 முதல் கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் மனை ஒப்புதலுடன் கூடிய கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது:
நான்கு குடியிருப்புகளுக்குள் மற்றும் 4 ஆயிரம் சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை மற்றும் 2 தளங்கள் கொண்ட தனித்த கட்டடம்.
2 ஆயிரம் சதுர அடிக்குள் கட்டப்படும் வாகன நிறுத்துமிடத்துக்கான தரைத்தளம் மற்றும் முதல்தளம் கொண்ட தனித்த வணிகக் கட்டடம்.
உள்ளூர் திட்டக் குழுமத்திடம் திட்ட அனுமதி பெற்ற பின்னரே, மதுரை உள்ளூர் திட்டப் பகுதிக்கு உள்பட்ட உள்ளாட்சிகளால் கட்டட அனுமதி வழங்கப்பட வேண்டும்.
மதுரை உள்ளூர்த் திட்டப் பகுதிக்குள் மதுரை மாநகராட்சி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், ஆனையூர், அவனியாபுரம் நகராட்சிகள், பரவை, விளாங்குடி, ஹார்விபட்டி, திருநகர், சோழவந்தான் பேரூராட்சிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 179 கிராம ஊராட்சிகள் உள்ளடங்கும்.