தினமலர் 16.09.2010
கட்டுமான பணி தரம் குறைவு
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 12வது வார்டு பகுதியில் நடக்கும் சாக்கடை கால்வாய் கட்டுமான பணி தரமின்றி இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி 12வது வார்டு கட்டபொம்மன் நகர், மூர்த்தி நகர், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணி தரமின்றி இருப்பதால், புதிய கால்வாய்களில் வெடிப்பு ஏற்பட்டு, சிதிலம் அடைவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் கூறியதாவது: கான்கிரீட் கலவை தயாரிக்க 18 சட்டி ஜல்லி, 12 சட்டி மணல், 1.5 சட்டி சிமென்ட் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன. கால்வாயின் மேற்குப்புறம் மட்டுமே சிறிய ஜல்லியில் கான்கிரீட் கலவை தயாரித்து தரமாக பூசப்படுகிறது. இதனால், மழை, வெயிலுக்கு தாங்காமல் வெடிப்பு ஏற்பட்டு இடிந்து விடுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு பணியை தரமாக செய்து முடிக்க வேண்டும். புதிதாக கட்டப்பட்ட கால்வாய் மீண்டும் சிதிலம் அடைந்தால், இப்பகுதி மக்கள் மாநகராட்சி முன் போராட்டம் நடத்த தயங்க மாட்டோம், என்றனர்.