தினகரன் 17.09.2010
விழுப்புரத்தில் மழை நீரை வெளியேற்ற நிரந்தர திட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் பஸ் நிலைய பகுதியில் தேங்கும் மழை நீரை அகற்ற ஆய்வுப் பணிகள் நடந்தது. விழுப்புரம் பஸ் நிலையம், பெருந்திட்ட வளாகம் மற்றும் சுற்றியுள்ள சாலாமேடு, வழுதரெட்டி பகுதிகளைச் சேர்ந்த குடியிருப்புகளில் மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தவிர்க்க நிரந்தர நடவடிக்கை எடுக்க அமைச்சர் பொன்முடி, கலெக்டர் பழனிசாமி ஆகியோர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனையொட்டி டி.ஆர்.ஓ., வெங்கடாசலம் தலைமையில் தாசில்தார் சேதுராமன், நகராட்சி கமிஷனர் சிவக்குமார், பொறியாளர் பார்த்திபன், வருவாய் ஆய்வாளர் குணசேகரன், வழுதரெட்டி ஊராட்சித் தலைவர் ராயர் உள்ளிட்டோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
புதிய பஸ் நிலையம், பெருந்திட்ட வளாகம் மற்றும் சுற்றுப்புற குடியிருப்பு பகுதியில் தேங்கும் மழை நீரை, பஸ் நிலையம் எதிரே சென்ற பழைய ஏரி நீர் வரத்து வாய்க்கால் வழியாகத் தான் வெளியேற்ற முடியும், மற்ற வழிகள் மேடான பகுதிகள் என்பதால் மாற்று திட்டத்திற்கு வழியில்லை. சுதாகர் நகர் வழியாக சென்ற பழைய வாய்க்கால்கள் தூர்வாரி அதன் மூலம் மழை நீரை வெளியேற்றுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், மாற்று வழியாக திட்டம் நிறைவேற்ற வேண்டுமென வருவாய்த் துறையினர் மழுப்பினர். இதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் வசதியை ஏற்படுத்தியாக வேண்டுமென டி.ஆர்.ஒ., கூறினார். சுதாகர் நகர் சாலையின் கீழ் பாதாள வாய்க்கால் அமைத்து மழை நீரை வெளி யேற்றுவது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.