தினமலர் 22.09.2010
மழை நீர் சேமிப்புக்கு ரூ.52.70 லட்சம் ஒதுக்கீடு
மதுரை: மதுரை மாவட்டத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டும் வகையில், மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்த 52.70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: விவசாயம், குடிநீருக்கு நீர் அதிகம் பயன்படுத்துவதால் கிணறு, குழாய்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. நிலத்தடி நீர் செறிவூட்டும் வகையில், மழை நீர் சேமிப்புத் திட்டம் வேளாண்மை பொறியியல் துறை மூலம் 52.70 லட்சம் ரூபாய் மதிப்பில் செயல் படுத்தப்படுகிறது. சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தடுப்பணைகள், பண்ணைக் குட்டைகள் அமைக்கப்படும். தனியார் நிலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இதர விவசாயிகள் 10 சதவீதம், ஆதி திராவிடர்கள் 5 சதவீதம் பங்களிப்புத் தொகை செலுத்த வேண்டும். வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர், 60, டி.பி.கே. ரோடு, தமிழ்நாடு பாலிடெக்னிக் அருகில், மதுரை, 0452- 267 7990, உதவி செயற்பொறியாளர் (வே.பொ.,), காளைத்தேவர் நகர், தேனி மெயின் ரோடு, உசிலம்பட்டி அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். விதிமுறைகளின்படி நில ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.