தினகரன் 30.09.2010
சாலை மேம்பாட்டுக்கு ரூ.ஆயிரம் கோடி நிதி நகர் ஊரமைப்பு துறை இயக்குநர் தகவல்
நெல்லை, செப். 30: நகரமைப்பு சாலை மேம்பாட்டுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என நகர் ஊரமைப்பு துறை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சல் தெரிவித்தார்.
பாளையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முன்பெல்லாம் 3 முதல் 6 மாதங்களுக்குள் தான் உள்ளூர் திட்ட குழும கூட்டம் நடக்கும். தற்போது அதை மாதந்தோறும் கலெக்டர் நடத்துவதால் குறைபாடுகள் உடனுக்குடன் களையப்படுகின்றன. கட்டட அங்கீகாரத்துக்கு தமிழகத்தில் 1 மாதத்துக்கு 1000 மனுக்கள் வருகின்றன. 500 மனுக்களுக்கு தீர்வு காணப்படுகிறது. நெல்லையில் 32 மனுக்கள் முடிக்கப்படாமல் உள்ளன.
ஷ்ஷ்ஷ்.tஸீ.ரீஷீஸ்t.வீஸீ//பீtநீஜீ.
என்ற இணையதளத்தில் விண்ணப்ப விவரங்களை பார்க்கலாம். திங்கள்கிழமை தோறும் மனுக்கள் பற்றிய விவரங்கள் அந்த இணையதளத்திலும், கலெக்டரின் இணையதளத்திலும் வெளியிடப்படுகின்றன.
உள்ளாட்சி அமைப்புகள் 400 சதுர அடிவரை கட்டட அனுமதி அளிக்கலாம். கலெக்டர் பொதுவாக 15000 சதுர அடி வரையும், கல்லூரிகளுக்கு 25000 சதுர அடி வரையும் அனுமதிக்கலாம். பள்ளிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் அடி வரையறை இல்லை. வீடுகள் நிலத்தின் 50 சதவீதம் வரை கட்டப்படவேண்டும் என்பதை மாற்றி 70 சதவீதம் வரை கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வணிக கட்டடங்கள் இருக்கும் நிலத்தில் 65 சதவீதம் வரை கட்டப்படலாம். சாலையோரம் 50 சதுர மீட்டருக்கு ஒரு கார் நிறுத்துமிடத்துக்கும், குடியிருப்புகளில் 75 சதுர மீட்டருக்கு ஒரு கார் நிறுத்துமிடத்துக்கும் இடம் விடவேண்டும். விதிமுறை மீறல் இருந்தால் நகர் ஊரமைப்பு சட்டப்படி கட்டடத்தை ‘சீல்‘ செய்ய லாம். நகரமைப்பு சாலை மேம்பாட்டுக்கு ரூ.1000 கோடியை துணை முதல்வர் ஒதுக்கியுள்ளார். இதில் ரூ.350 கோடி உட்கட்டமைப்பு அடிப்படை வசதி கட்டணமாக எங்கள் துறை மூலம் வசூலானது அடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பேசிய கலெக்டர் ஜெய ராமன், ‘தச்சநல்லூர் & தென்காசி சாலையில் தச்சநல்லூரிலிருந்து பழைய பேட்டை வரை 2.7 கி.மீ. தூரம் இருவழிச்சாலையாக மாற்ற ரூ.4.5 கோடிக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் திட்டக்குழும நிதி உதவியுடன் இது செயல்படுத்தப்படும். முருகன்குறிச்சியில் இருந்து வண்ணார்பேட்டை வரை சாலை இருபுற விரிவாக்கத்துக்கு ரூ.5.2 கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இவை ஜனவரி மாதத்துக்குள் செயல்படுத்தப்படும்‘ என்றார்.
பேட்டியின் போது பயிற்சி கலெக்டர் கிரண் குரானா, நகர் ஊரமைப்பு உறுப்பினர் செயலர் சேகரன், மண்டல நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் பாபு, மக்கள் தொடர்பு அலுவலர் ரவீந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.