தினமணி 26.10.2010
வீட்டு வரைபட அனுமதிக்கு புதிய நிபந்தனைகள்
திருநெல்வேலி, அக். 25: திருநெல்வேலி மாநகர் பகுதியில் வீடு கட்டுவதற்கு வரைபட அனுமதி பெற மாநகராட்சி பல புதிய நிபந்தனைகளை மாமன்றத்துக்கே தெரியாமல் கொண்டு வந்துள்ளதற்கு பாளையங்கோட்டை மண்டலத் தலைவர்
சுப. சீதாராமன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
வீட்டு வரைபடம் அனுமதி பெறுவதற்கு பல புதிய நிபந்தனைகளை மாநகராட்சி விதித்துள்ளது.
இந்த நிபந்தனைகள் மாமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலும், மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமலும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த புதிய நிபந்தனைகள் மக்களை குழப்பமடையச் செய்து, அதிர்ச்சியடை வைத்துள்ளது.
வீட்டுமனை விண்ணப்பத்தோடு நோட்டரி பப்ளிக், கிராம நிர்வாக அதிகாரி, நகர சர்வேயர் ஆகியோர் அத்தாட்சி செய்த வீட்டுமனையின் வரைபடம், 15 ஆண்டுகளுக்கான வில்லங்க சான்றிதழ், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலையை ஒட்டிய வீட்டுமனையாக இருந்தால், அந்த துறைகளின் தடையில்லா சான்றிதழ், வீட்டுமனை உரிமையாளர் குறித்து அரசு வழக்கறிஞரிடமிருந்து அசல் சான்றிதழ் ஆகியவை பெற வேண்டும்.
மேலும் குடிநீர் வசதி குறித்து ரூ. 20 அரசு முத்திரைத்தாளில் உறுதிமொழி, வட்டாசியரிடமிருந்து வீடு கட்ட தடையில்லா சான்றிதழ், தீயணைப்புத் துறையிலிருந்து தடையில்லாச் சான்றிதழ், மழைநீர் சேகரிப்பு ஏற்பாடு, சூரிய அடுப்பு ஏற்பாடு குறித்த வரைப்படம் உள்ளிட்ட பல புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இவ்வளவு நிபந்தனைகள் தேவையில்லாதது ஆகும். இந்த விசித்திர நிபந்தனைகளை மாநகராட்சி உடனே கைவிட்டு, மாநகராட்சி, நகராட்சி கட்டட விதிகளில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சீதாராமன்.