மாலை மலர் 28.10.2010
சென்னை நகரில் விதிமுறையை மீறி கட்டிய கட்டிடங்கள் பட்டியல் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவு
சென்னை, அக். 28- சென்னை சூளைமேட்டை சேர்ந்த சாலமன் என்பவர் ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார்.
அதில் கூறி இருப்பதாவது:-
சூளைமேட்டில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு உள்ளன. இதில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு உருவாகி இருக்கிறது.
விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து மாநகராட்சி மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமத்தில் புகார் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அவர்கள் சென்னை நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பட்டியலை நவம்பர் 12-ந்தேதிக்குள் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி, பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு உத்தரவிட்டனர்.