தினமணி 10.11.2010
கட்டட அனுமதிக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்: நகராட்சி ஆணையர்
பெரம்பலூர், நவ. 9: பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குள் புதிய கட்டடம் கட்ட அனுமதி பெற விரும்புவோர் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் நகராட்சி ஆணையர் போ.வி. சுரேந்திரஷா.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதிய கட்டடம் கட்ட விண்ணப்பிக்க காலிமனை ரசீது, நிகழாண்டுக்கான வீட்டு வரி ரசீது, பத்திர நகல், பட்டா நகல், சர்வே வரைபடம், சர்வே ஏ பதிவேடு நகல், புள்ளியியல் படிவம், 13 ஆண்டுக்கான வில்லங்கச் சான்றிதழ், வரைபடங்கள்-5, தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் நல நிதிக்கான வரைவோலை, மனுதாரர் அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகளில் அடங்கும் மனைகள், அனுகு சாலை உள்ள இடங்களில், கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், அனுமதியற்ற மனைப் பிரிவுகளில் எந்த வித மனை ஒப்புதல், கட்டட அனுமதி வழங்க முடியாது. 4 ஆயிரம் சதுர அடிக்கு மிகாமல் தரை, இரண்டு தளங்கள் கொண்ட குடியிருப்புக் கட்டடங்கள், 2 ஆயிரம் சதுர அடியில் கட்டப்படும் தரைதளம், முதல் தளம் கொண்ட வணிகக் கட்டடம் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பித்து, கட்டட விதிகளுக்கு உள்பட்டிருந்தால் மட்டுமே கட்டட அனுமதி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.