தினகரன் 19.11.2010
அனுமதியற்ற கட்டிடம் பற்றி தகவல் ஆணையர் புகார் அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம்
புதுடெல்லி, நவ. 19: லலிதா பார்க்கில் 5 மாடி கட்டிடம் இடிந்து 70 பேர் பலியானார்கள். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் இந்த கோர சம்பவம் நடந்தது என்று தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், அதிர்ச்சி தகவலை தலைமை தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி வெளியிட்டுள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பல்வேறு மேல்முறையீட்டு மனுக்கள் என்னிடம் விசாரணைக்காக வந்தபோது, டெல்லியில் ஏராளமான அனுமதியற்ற கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் & பில்டர்கள் இடையே ரகசிய தொடர்பு இருப்பது தெரிந்ததும் முதல்வர் ஷீலா தீட்சித், மாநகராட்சி கமிஷனர் மெஹ்ரா ஆகியோருக்கு கடந்த ஆண்டு நவம்பரில் கடிதம் எழுதினேன்.
முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் ஷாதாரா தெற்கு மண்டலத்தில் மட்டும் 65 அனுமதியற்ற கட்டிடங்களின் பட்டியலை அனுப்பி வைத்தேன். மாநகராட்சியிடம் எந்த அனுமதியும் பெறாமல் 4 மாடி வரையில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. பில்டர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தேன்.
அனுமதியற்ற கட்டிடங்கள் தொடர்பான விவகாரத்தில் மாநகராட்சி கமிஷனர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார். அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்து எந்த பலனும் விளையவில்லை. அனுமதியற்ற கட்டிடங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.
அதனால் போலீசின் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் கடந்த ஆண்டு புகார் அளித்தேன். விசாரணை நடந்து கொண்டிருப்பதாக 2010 பிப்ரவரி 25ம் தேதியன்று உறுதிமொழியை லஞ்ச ஒழிப்புத்துறை அளித்தது. இவ்வாறு அவர் கூறினார்.
சைலேஷ் காந்தி புகார் அளித்துள்ளது பற்றி தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தாவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் உதவி போலீஸ் கமிஷனர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கோர சம்பவத்தை தவிர்த்திருக்கலாம்.