தினகரன் 22.11.2010
வசந்த் கஞ்ச் உட்பட முக்கிய பகுதிகளில் 16,000 அடுக்குமாடி வீடுகள்
புதுடெல்லி, நவ.22: டெல்லி மாநகர வளர்ச்சி ஆணையம் சார்பில் 16,000 அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படுகின்றன. வசந்த் கஞ்ச், முக ர்ஜி நகர் உட்பட பல்வேறு முக்கிய இடங்களில் இந்த வீடுகள் கட்டப்படும்.
இதுபற்றி டெல்லி மாநகர வளர்ச்சி ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
டெல்லி வளர்ச்சி ஆணையம் சார்பில் 16,000 அடுக்குமாடி வீடுகள் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் வசந்த் கஞ்ச், முகர்ஜி நகர், மோதியாகான், கல்யாண் விகார், ஜசோலா, துவாரகா, ரோகிணி, நரேலா, ஜபாராபாத், கொண்ட்லி, கரோலி ஆகிய முக்கிய பகுதிகளில் இந்த வீடுகள் கட்டப்படும்.
ஒரு அறைகொண்ட வீடு, 2 மற்றும் 3 படுக்கை அறைகளுடன் கூடிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். ஒரு அறை கொண்ட வீடுகள் நரேலா, திருலோக புரி, மற்றும் சிவாஜி என்கிளேவ் ஆகிய பகுதிகளில் கட்டப்படும்.
இதற்கான விண்ணப்பங்கள் 25ம் தேதி முதல் பெறப்படுகின்றன. விண்ணப்ப மனுக்கள் பெற டிசம்பர் 25 ம் தேதி கடைசி நாள். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. ஒரு அறை மட்டுமே கொண்ட வீட்டின் விலை ரூ3 லட்சம் முதல் 6 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மற்ற வீடுகளின் விலை அதன் பரப்பளவுக்கு ஏற்ப ரூ9 லட்சம் முதல் 1.12 கோடி ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதாவது சதுர அடியின் விலை ரூ1,536 முதல் ரூ6,069 வரை இருக்கும். 18 வயதான யாரும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுக்கு டெல்லியில் சொந்தமாக வீடு இருக்கக் கூடாது.
இதற்கான விண்ணப்ப மனுக்களை 25ம் தேதி முதல் குறிப்பிட்ட ஸ்டேட் வங்கி கிளைகள், ஐடிபிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎப்சி வங்கி, சென்டிரல் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்ப மனுக்களுடன் முன்பணமாக ரூ1.5 லட்சம் கட்ட வேண்டும். ஒரு அறை வீடுகளுக்கு முன் வைப்பு தொகையாக ரூ50,000 செலுத்த வேண்டும்.
குலுக்கலில் வீடு கிடைக்காவிட்டால் இந்த முன் வைப்புத் தொகை விண்ணப்பதாரர்களுக்கு திருப்பி கொடுக்கப்படும். விண்ணப்பத்துடன் ஒவ்வொருவரும் பான் கார்டு, வங்கி பாஸ் புத்தகம், முகவரி பரிசோதனைக்காக ரேஷன் கார்டு போன்றவற்றின் நகலையும் இணைக்க வேண்டும்.
போலி விண்ணப்பதாரர்களை தவிர்க்கும் விதத்தில், ஒதுக்கீடு பெற்றவர்கள் தங்களின் சொந்த வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்த வேண்டும் என்பது கட்டாயம்.
இந்த வீடுகளில் 17.5 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் 7.5 சதவீதம் பழங்குடியினருக்கும், முன்னாள் ராணுவ வீரர்கள், போரில் கணவரை இழந்தவர்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்காக தலா ஒரு சதவீதம் ஒதுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.