தினகரன் 24.11.2010
கட்டிட அனுமதி பெற எளிய வழிமுறை இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் மாநகராட்சி கமிஷனர் தகவல்
கோவை, நவ.24: மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா நேற்று வெளியிட்ட அறிக்கை:
கோவை மாநகராட்சியில் புதிதாக கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி பெறும் முறை எளிதாக்கப்பட்டுள்ளது. கோப்புகளின் நிலையை அறியவும், மாநகராட்சிக்கு கட்டணமாக செலுத்த வேண்டிய தொகை பற்றி தெரிந்து கொள்ளவும், கட்டிட அனுமதி பெற்றுத் தருவதாக இடைத்தரகர்கள் பொதுமக்களை அணுகி மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திக் கொடுப்பதை தவிர்க்கவும் பின்பற்றப்படும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.
வரைபடத்துடன் ப்ளு பிரிண்ட் ஐந்து நகல்கள், பத்திர நகல், 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் உறுதிமொழிப் படிவம், அந்த இடத்தின் உடைய நான்கு மூளைகளும் தெரியுமாறு மனை உரிமையாளர், உடன் நின்று எடுத்த படம், மனை உரிமையாளரின் பாஸ் போர்ட் படம் இரண்டு, விண்ணப்பக் கட்டணம், கட்டிட உரிமக் கட்டணம், கட்டிட இடிபாடு அகற்றும் கட்டணம், தொழிலாளர் நலநிதி கட்டணம், உள்ளூர் திட்டக் குழும அபிவிருத்திக் கட்டணம், பாதாளச் சாக்கடை கட்டணம் மற்றும் தபால் செலவுக் கட்டணம் ரூ.100 ஆகிய கட்டணங்களை மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு எதிர்புறம் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செலுத்திய ரசீது, விண்ணப்பதாரால் நேரில் வர இயலாத பட்சத்தில் அவரால் சான்றளிக்கப்பட்ட கடிதம் ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகை விபரங்கள் தங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வரைபடம் சரிபார்த்த உடன் அனுப்பி வைக்கப்படும். நகரமைப்பு பிரிவில் விண்ணப்பம் பெறப்பட்டவுடன் உதவி நகரமைப்பு அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக கட்டிட அனுமதி உத்தரவு வழங்கப்படும். கட்டிட உத்தரவு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் உரிமைதாரரின் முகவரிக்கு பதிவுத் தபாலில் நேரடியாக அனுப்பப்படுகிறது.
2011 ஜனவரி 1 முதல் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவைப்படுகின்ற வரைபடத்தை தயார் செய்து கொடுக்கவும், அவர்களுக்கு வழிகாட்டவும் தனியாக பிளான் பிரிபரேசன் செல் தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம், பொதுமக்கள் நேரடியாக மாநகராட்சி பிரதான அலுவலகத்திலேயே கட்டிட வரைபடம் தங்களின் தேவைக்கேற்ப தயார் செய்யவும், விண்ணப்பங்கள் பூர்த்த¤ செய்து அனுமதி பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து ஏற¢பாடுகளும் செய்யப்பட உள்ளன. இவ்வாறு அன்சுல் மிஸ்ரா கூறி உள்ளார்.