தினகரன் 25.11.2010
கலப்பட பொருட்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் உடனடி ஆய்வு
புதுடெல்லி, நவ. 25: கலப்பட பொருட்களை கொண்டு மோசமாக கட்டப்பட்ட கட்டிடங்களை ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்தர் சாப்ரா. இவருக்கும், இவரது சகோதரருக்கும் சேர்த்து கிரேட்டர் கைலாஷில் 500 சதுர மீட்டர் இடம் உள்ளது. இதில் நிலநடுக்கத்தினாலும் பாதிக்காத வகையில் கட்டிடம் கட்டி தருமாறு, ஷோமேன் கன்ஸ்ட்ரக்ஷன் அண்டு இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
இதன்படி, அந்த கட்டுமான நிறுவனம் கட்டிடம் கட்டி கொடுத்தது. ஆனால், கட்டிடத்தில் வெகு சில நாட்களிலேயே விரிசல் விழுந்தும், சேதமும் அடைந்தன. இதனால் மோசமான பொருட்களை பயன்படுத்தி கட்டிடம் கட்டியிருப்பதாக அவர்கள் ராஜேந்தர் நம்பினார். இதனால் பொருளாதார குற்றப்பிரிவில் அவர் புகார் செய்தார்.
போலீசார் கட்டிடத்தை ஆராய்ந்ததில், ராஜேந்தர் கூறுவது உண்மை என்று தெரிந்தது. இதையடுத்து அவரது புகாருக்கு சான்று அளித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு தெரிவித்தனர்.
இதன்படி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராஜேந்தர் வழக்கு தொடர்ந்தார். மாஜிஸ்திரேட் ராகேஷ் பண்டிட் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நிறுவனத்தின் 4 அதிகாரிகள் மீது போலீசார் வழக்கு பதிய மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது மாஜிஸ்திரேட் ராகேஷ் பண்டிட் கூறியதாவது:
கிழக்கு டெல்லி லட்சுமி நகரில் தரமற்ற மற்றும் கலப்பட பொருட்களை கொண்டு கட்டப்பட்ட 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70 பேர் இறந்தனர். இந்த வழக்கிலும் தரமற்ற மற்றும் கலப்பட பொருட்களை கொண்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது தெளிவாகியுள்ளது. இதுபோன்ற கட்டிடங்களை ஆராய்ந்து மாநில அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனெனில், இவை மக்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் இருக்கின்றன. அங்கு அசம்பாவிதம் நிகழும்போது பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 28ம் தேதி நடைபெறும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.