Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையில் 100 கட்டடங்களில் விதிமீறல்; விரைவில் அதிரடி

Print PDF

தினமலர்       16.12.2010

கோவையில் 100 கட்டடங்களில் விதிமீறல்; விரைவில் அதிரடி

கோவை :  கோவையில் பொதுமக்கள் பயன் பாட்டுக்குரிய கட்டடங்களில், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால் உத்தரவிட்டுள்ளார்.

கோவை உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்தில், பொது மக்கள் மற்றும் விண்ணப்பதாரர்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கோவை நகருக்கான புதிய "மாஸ்டர் பிளான்' தயாரிக்கும் பணி முடிந்து, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசு விரைவில் வெளியிடும். முதலில் வரைவு வெளியிடப்பட்டு, 60 நாட்களில் அது குறித்த கருத்துக்களைத் தெரிவிக்க மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். பின், தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, இறுதியான "மாஸ்டர் பிளான்' வெளியிடப்படும்.

கோவை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால், மாஸ்டர் பிளானில் மாற்றம் செய்ய இயலாது. ஆனால், உள்ளூர் திட்டக்குழுமப் பகுதி விரிவாக்கம் செய்யப்படும். தற்போது, ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 601 ஹெக்டேர் பரப்புள்ள உள்ளூர் திட்டக் குழுமப் பகுதி, ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 386 ஹெக்டேர் பரப்புக்கு விரிவாக்கப்படும். புதிய திட்டச்சாலைகளுக்கான இடங்களை வாங்க, நகர ஊரமைப்புத்துறை நிதி வழங்கத் தயாராயுள்ளது. இதற்காக, கோவை மாநகராட்சியிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை. திட்டச்சாலைகளின்  அகலத்தைக் குறைப்பதில், நகர ஊரமைப்புத்துறைக்கு உடன்பாடு இல்லை. பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும்பட்சத்தில், எந்தத் திட்டச்சாலையின் அகலமும் குறைக்கப்படாது.  கோவை நகரில், மக்கள் பயன்பாட்டுக்குரிய கட்டடங்களில் விதிமீறல்கள் இருப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வின்படி, 100க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்களில் இத்தகைய விதிமீறல் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. "பார்க்கிங்' இடங்களை வணிக பயன்பாட்டுக்குப் பயன் படுத்துவதாகவும் தகவல் வருகிறது.

விதிமீறல் கட்டடங்களில், குறிப்பிட்ட காலத்துக்குள் ஆய்வு செய்தால் மட்டும்தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதில்லை; எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம். கோவை நகரில் இதுபோன்ற விதிமீறல் கட்டடங்களை அறிய, மண்டல துணை இயக்குனர் தலைமையில் ஓர் ஆய்வுக்குழு அமைக்கப்படும். இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி தரப்பட்டபோது இருந்த வரைபடத்தை ஒப்பிட்டு, விதி மீறி கட்டப்பட்ட அல்லது பயன்பாட்டிலுள்ள கட்டடங்களை அறிய உத்தரவிடப்படும். மக்கள் பயன்பாட்டுக்குரிய கட்டடங்களில் தீத்தடுப்பு வசதி, "பார்க்கிங்' வசதி இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

கல்வி நிறுவன கட்டடங்கள், அறக்கட்டளையால் கட்டும் கட்டடமாக இருந்தாலும் முறையான அனுமதி பெற வேண்டும்; கட்டடத்தின் அளவுக்கேற்ப கட்டமைப்பு மற்றும் அடிப்படைக் கட்டணமும் செலுத்த வேண்டும். இதில் எந்த விதி விலக்கும் கிடையாது. அனுமதியில்லாமல் கட்டப்படும் கல்வி நிறுவன கட்டடங்களுக்கு, கல்வித்துறை சார்பில் அனுமதியும் வழங்கப்படுவதில்லை. திட்டக்குழுமத்துக்கு வரும் விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் அனுமதி அல்லது உரிய பதில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்பை விட, இப்போது தாமதம் குறைக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையம் அருகே, 5 ஸ்டார் ஓட்டலுக்கு விதிகளை மீறி எந்த அனுமதியும் தரப்படவில்லை; விமான நிலைய ஆணையத்தின் ஒப்புதலின்றி, அந்த சுற்று வட்டாரத்தில் பல அடுக்கு மாடி கட்ட எங்களது துறை அனுமதிப்பதில்லை.

இவ்வாறு நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் பங்கஜ்குமார்பன்சால் தெரிவித்தார். பேட்டியின்போது, கோவை உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் மூக்கையா, நகர ஊரமைப்புத்துறை மண்டல துணை இயக்குனர் சங்கரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

நோட்டீஸ் அனுப்புவோம் :  கோவை உக்கடம் மற்றும் அம்மன் குளம் பகுதிகளில், ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்ட நிதியில், நகர்ப்புற மக்களுக்கான அடிப்படை வசதி வழங்கும் (பி.எஸ்.யு.பி.,) திட்டத்தில் 3,840 வீடுகளை குடிசை மாற்று வாரியம் கட்டியுள்ளது. இந்த வீடுகளுக்கு நகர ஊரமைப்புத்துறை அனுமதி பெறப்பட்டிருக்கிறதா என்று பன்சாலைக் கேட்டபோது, அருகிலிருந்த உறுப்பினர் செயலர் இயக்குனர் மூக்கையா, "இல்லை' என்றார்.

பன்சால் கூறுகையில், ""தாமதமானாலும், அரசு கட்டடங்களுக்கு அனுமதி பெறப்பட்டு விடும். பெரும்பாலான அரசு கட்டடங்கள், விதிகளை மீறி கட்டப்படுவதில்லை. ஆனாலும், அனுமதியில்லாமல் அரசு கட்டடம் கட்டப்பட்டால், அவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்புவோம்,'' என்றார்.