Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகர ஊரமைப்புத் துறையின் அதிகாரம் பகிர்ந்தளிப்பு: சென்னைக்கு செல்லும் சிரமம் தவிர்ப்பு

Print PDF
தினமலர்      23.12.2010

நகர ஊரமைப்புத் துறையின் அதிகாரம் பகிர்ந்தளிப்பு: சென்னைக்கு செல்லும் சிரமம் தவிர்ப்பு


கோவை:லே-அவுட் மற்றும் பெரிய கட்டடங்களுக்கான அனுமதி பெறுவதற்காக, சென்னைக்கு படையெடுக்கும் சிரமத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நகர ஊரமைப்புத் துறையின் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.புதிய லே-அவுட், பெரிய கட்டடங்கள் மற்றும் வணிக கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம், தமிழக அரசின் நகர ஊரமைப்புத் துறைக்கு மட்டுமே உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தவிர்த்து, பிற மாவட்டங்களில் உள்ள உள்ளூர் திட்டக் குழுமம், புதிய நகர வளர்ச்சிக் குழுமங்கள் மற்றும் நகர ஊரமைப்புத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களுக்கும் குறிப்பிட்ட அதிகாரம் உள்ளது.இவற்றை நிர்வகிக்கும் உறுப்பினர் செயலர், மண்டல துணை இயக்குனர் ஆகியோர் மட்டுமே, 5 ஏக்கருக்குட்பட்ட லே-அவுட், 4 ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான குடியிருப்புக் கட்டடம் மற்றும் 2 ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான வணிக கட்டடங்களுக்கு அனுமதி அளிக்க முடியும். இதற்கும் அதிகமான பரப்புள்ள லே-அவுட் மற்றும் கட்டடங்களுக்கு, அனுமதி அளிக்கும் அதிகாரம் நகர ஊரமைப்புத்துறை இயக்குனருக்கு மட்டுமே உள்ளது. இதனால், 5 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் லே-அவுட் அமைப்பவர்களும், பல அடுக்கு மாடிக் கட்டடம் கட்டுவோரும் முறையான அங்கீகாரத்துக்காக சென்னைக்கு ஆண்டுக்கணக்கில் அலைய வேண்டியுள்ளது.அங்கீகாரம் பெறுவதற்காக, பல லட்ச ரூபாய் செலவழித்தாலும் உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை என்பது புரமோட்டர்கள் மற்றும் கட்டுமானதாரர்களின் நீண்ட கால குமுறல். இதனால், நகர ஊரமைப்புத்துறை இயக்குனரின் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து, மண்டல அலுவலர்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டுமென்று பல்வேறு அமைப்புகளும் அரசை வலியுறுத்தி வந்தன.ஆட்சியின் முடிவு காலத்தில் இந்த கோரிக்கையை ஏற்று, நகர ஊரமைப்புத் துறையின் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. துறையின் இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால், இதற்கான சுற்றறிக்கையை தமிழகம் முழுவதுமுள்ள உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர், மண்டல துணை இயக்குனர்கள் மற்றும் கலெக்டர்களுக்கும் கடந்த 20ம் தேதி அனுப்பியுள்ளார்.அதன்படி, கிராம ஊராட்சிகளில் 10 ஏக்கர் பரப்பில் லே-அவுட் அமைப்பதற்கு திட்ட அனுமதி மற்றும் தொழில்நுட்ப அங்கீகாரத்தை அந்தந்த பகுதியிலுள்ள திட்டக்குழும உறுப்பினர் செயலர் மற்றும் நகர ஊரமைப்புத்துறை மண்டல துணை இயக்குனர்களே வழங்கலாம். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பழைய நிலையே தொடரும்.கட்டடங்களைப் பொறுத்தவரை, குடியிருப்புக் கட்டடங்களாக இருந்தால், 2,500 சதுர மீட்டர் பரப்பிலான தரை தளம், 15 மீட்டர் உயரமுள்ள கட்டடங்களுக்கு இவர்களே அனுமதி வழங்கலாம்; எல்லா உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இது பொருந்தும். வணிக மற்றும் கல்வி நிறுவன கட்டடங்களுக்கும் 2,500 சதுர மீட்டர் வரையிலும் அனுமதி வழங்க அதிகாரம் தரப்பட்டுள்ளது. பள்ளிக் கட்டடங்களுக்கு இதுவரை தரைதளம் மற்றும் முதல் தளத்துக்கு மட்டுமே, மண்டல அலுவலகங்களில் அனுமதி தரப்பட்டு வந்தது. தற்போது, தரைதளத்துடன் 2 தளங்கள் வரை கட்டுவதற்கு அதிகாரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி சம்பத் கமிட்டியின் பரிந்துரைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டுமென்றும் அந்த சுற்றறிக்கை வலியுறுத்தியுள்ளது.மனைகளைப் பிரிப்பது, மனைகளை இணைப்பது, திட்டப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்குவதிலும் முன்பிருந்ததை விட, கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனுமதி கோரும் விண்ணப்பங்களின் மீது 30 நாட்களுக்குள் இறுதி முடிவெடுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த உத்தரவால், தமிழகம் முழுவதிலிருந்தும் லே-அவுட் மற்றும் கட்டட அனுமதிக்காக சென்னைக்கு படையெடுக்க வேண்டிய அவதி தவிர்க்கப்பட்டுள்ளது; லஞ்சத்தின் அளவும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், கிராம ஊராட்சிகளில் அங்கீகாரமற்ற லே-அவுட்கள் அதிகரிப்பது தடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். திருந்துவார்களா?கிராம ஊராட்சிகளில் புதிய லே-அவுட்களுக்கு அந்தந்தப் பகுதியிலேயே அனுமதி பெறலாம் என்றாலும், ஊராட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பு அவசியம். கொடுப்பதை வாங்கிக் கொண்டு, இத்தகைய லே-அவுட்களை அனுமதிப்பதே அவர்கள் தான். அவர்கள் திருந்தினால் மட்டுமே, இத்தகைய அதிகாரப் பகிர்வுக்கு உண்மையான பலன் கிடைக்கும்.பேரூராட்சிகளிலும் 10 ஏக்கர் வரையிலும் லே-அவுட் அமைக்க, திட்டக் குழுமங்களில் அனுமதி அளித்தால், அங்கேயும் சட்டவிரோத லே-அவுட் உருவாவதைத் தடுக்கலாம். செயல் அலுவலர்களின் சொத்துக் குவிப்பையும் கட்டுப்படுத்தலாம்.
Last Updated on Friday, 24 December 2010 09:53