தினமலர் 09.08.2012
மாநகராட்சிக்கு அதிகாரம் அளிக்க சி.எம்.டி.ஏ., நிர்வாகம் அனுமதி?
சென்னை:சென்னையில், 800 சதுர அடிக்கு குறைவான மனைகளில் கட்டட அனுமதி அளிப்பது குறித்து முடிவெடுக்க மாநகராட்சிக்கு அதிகாரம் அளிக்க சி.எம்.டி.ஏ., நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.சி.எம்.டி.ஏ., எல்லை விரிவாக்கம் குறித்து விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:
குறைந்த பரப்பில்...
சென்னையில், முன்பு 40 வீடுகள் மட்டும் இருந்த இடத்தில், தற்போது, 1,000 குடும்பங்கள் வசிக்கும் அளவுக்கு வீடுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிகரிக்கும்போது, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் வீடு கட்ட குறைந்தபட்ச பரப்பளவு, 800 சதுர அடியாக இருக்க வேண்டும் என்று வளர்ச்சி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு குறைவான பரப்பளவு நிலம் வைத்திருப்பவர், உரிய அனுமதியுடன் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, திட்ட அனுமதி வழங்குவதற்கான குறைந்தபட்ச பரப்பளவு விகிதத்தை குறைக்குமாறு சி.எம்.டி.ஏ., விடம் பல தடவை முறையிடப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்கும் விதமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.இவ்வாறு அவர் பேசினார்.
கூடுதல் அதிகாரம்
இது குறித்து சி.எம்.டி.ஏ., துணை தலைவரும், வீட்டுவசதித்துறை செயலருமான பணீந்திர ரெட்டி கூறியதாவது:இந்த கோரிக்கையை முழுமையாக ஏற்பது சாத்தியமில்லை. எனினும், குடும்ப பங்கீடு மூலமும், அதிக பரப்பு நிலம் வைத்திருத்து அதன் ஒரு பகுதி விற்கப்பட்டதால், விரிவாக்க பணிகளுக்கு நிலம் எடுக்கப்பட்டதால் பரப்பு குறைதல் போன்ற காரணங்களால், 800 சதுர அடிக்கு குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு வீடு கட்ட சி.எம்.டி.ஏ., அனுமதி அளிக்கிறது.
இந்த அதிகாரத்தை மாநகராட்சிக்கு அளிப்பதற்கான கருத்து பரிசீலனையில் உள்ளது.இவ்வாறு பணீந்திர ரெட்டி கூறினார்.