Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரையில் விதி மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு "சீல்

Print PDF
தினமணி       27.04.2013

மதுரையில் விதி மீறி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு "சீல்


மதுரை தெற்குமாசி வீதியில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை "சீல்' வைத்தனர்.

தெற்குமாசி வீதியில் தேவாங்கர் சத்திர வளாகத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு  உள்ளூர் குழுமத் திட்ட அலுவலகத்தில் தரைத்தளம் 4,050 சதுர அடிக்கும், ஸ்டில்ட் தளம் மற்றும் 2 ஆம் தளம் ஆக மொத்தமாக 12,150 சதுர அடிக்கும் வணிக வளாகம் கட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஆனால், கட்டட வரைபடம் மற்றும் மாநகராட்சி அனுமதி பெறாமல், பாதாள அறை அமைப்பதற்காக 15 அடி ஆழத்தில் தோண்டி கான்கிரீட் தூண்கள் அமைத்து கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

15 அடி ஆழத்துக்குத் தோண்டுவதால் அருகேயுள்ள கட்டடங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு விபத்துகள் நிகழவும், உயிர்ச் சேதங்களுக்கும் வாய்ப்புள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாநகராட்சியினருக்குப் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால், முதன்மை நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், தெற்கு மண்டல உதவி ஆணையர் ஆ. தேவதாஸ்,  உதவி நகரமைப்பு அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்ட அலுவலர்கள் குறிப்பிட்ட கட்டடப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை சென்று ஆய்வு நடத்தினர்.

வரைபட அனுமதியை மீறியும், மாநகராட்சி அனுமதியின்றியும் பாதாள அறை கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. அப் பணியை உடனே நிறுத்திய மாநகராட்சி அதிகாரிகள், அக் கட்டடத்துக்கு "சீல்' வைத்தனர்.

தொடரும் விதி மீறல்கள்: அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மதில் சுவரிலிருந்து 1 கி.மீ. சுற்றளவுக்கு 9 மீ. உயரக் கட்டுப்பாட்டை மீறி ஏராளமான கட்டடங்கள்  கட்டப்பட்டுள்ளன.

இதற்கு மூலகாரணமாகப் புகார் கூறப்பட்ட முன்னாள் நகரமைப்பு அலுவலர் (பொறுப்பு) முருகேசன் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீதான புகார்கள் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந் நிலையில், நெருக்கடியான இப் பகுதியில் பாதாள அறைகள் கட்டுவதற்காகப் பள்ளம் தோண்டும் பட்சத்தில், அருகேயுள்ள பல கட்டடங்களில் சரிவு ஏற்பட்டு பெரும் விபத்துகள் நிகழவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற பகுதியில் முறைப்படி விண்ணப்பித்தால்கூட பாதாள அறைகளுக்கு மாநகராட்சியினர் அனுமதி வழங்குவதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த விதி மீறல் பாதாள அறை கட்டடத்துக்கு "சீல்' வைத்தது பாராட்டுக்குரியது.

அதேசமயம், ஏற்கெனவே விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்த பட்டியலை விரைவுபடுத்தி, சம்பந்தப்பட்ட கட்டடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இதற்கு துணைபோன அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.