Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் கழிவால் சாலைகள் மறுசீரமைப்பு; நுண்ணுயிரி மூலம் ஏரி நீரை தூய்மையாக்கும் திட்டம்

Print PDF
தினமணி                  03.05.2013

பிளாஸ்டிக் கழிவால் சாலைகள் மறுசீரமைப்பு; நுண்ணுயிரி மூலம் ஏரி நீரை தூய்மையாக்கும் திட்டம்


பிளாஸ்டிக் கழிவால் சாலை மறுசீரமைப்பு மற்றும் நுண்ணுயிரி மூலம் ஏரி நீரைத் தூய்மையாக்கும் திட்டம் ஆகியன தலா ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு ஊரகப் பகுதிகளில் ஆயிரத்து 255 கிலோ மீட்டர் நீளமுள்ள தார் சாலைப் பணிகளை மேற்கொள்வதற்காக கடந்த இரண்டு நிதியாண்டுகளில் ரூ.153.50 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் ஆயிரத்து 2 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகள் முடிவடைந்து விட்டன.

இந்த ஆண்டும் ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள தார் சாலைகள் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நகரப் பகுதிகளில் நடப்பாண்டில் 100 கிலோ மீட்டர் நீளத்துக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியின் கீழ் 2011-2012 நிதியாண்டில் ரூ.50 கோடியில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி 446 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலைகள் மறுசீரமைக்கப்பட்டன. கடந்த நிதியாண்டில் ரூ.84.90 கோடியில் 577.70 கிலோ மீட்டர் நீளத்துக்கு பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலைகளை மறுசீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பிளாஸ்டிக் சாலைகளின் தரம் சிறந்ததாகவும், மேம்பட்டதாகவும் உள்ளதால் நடப்பு நிதியாண்டிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.50 கோடியில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகள் மறுசீரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.50 கோடியில் நுண்ணுயிரி மூலம் ஏரிகளில் உள்ள நீரினைத் தூய்மையாக்கும் திட்டம், சோலை காடுகளில் உள்ள தாவரங்களை மறு உற்பத்தி செய்யும் திட்டம், உதகை ஏரிப் பாதுகாப்பு நிதி மற்றும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள் காப்பக அறக்கட்டளையின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சொந்தக் கட்டடங்கள்: நடப்பாண்டில் சிவகங்கை, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் செயல்படும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட அலுவலகங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் ரூ.12 கோடியில் கட்டப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்களுக்கு வீட்டுக் கடன்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டு கடன் வசதி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வரும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வீட்டு கடன் வசதி ஏதும் வழங்கப்படவில்லை. அவர்களது கோரிக்கையை ஏற்று வாரிய பணியாளர்களுக்கு நடப்பாண்டுமுதல் வீட்டுக் கடன் வசதி ஏனைய அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோன்று அளிக்கப்படும். இதன் மூலம் 700 வாரிய பணியாளர்கள் பயன் பெறுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.