தினமணி 27.11.2009
தக்கலை தர்கா பள்ளி சாலையில் ரூ. 25 லட்சத்தில் மழைநீர் வடிகால்: நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்
தக்கலை, நவ. 26: பத்மநாபபுரம் நகராட்சிக்கு உள்பட்ட தக்கலை தர்கா பள்ளி முன்பக்கமுள்ள சாலையில் இருபுறமும் ரூ. 25 லட்சத்தில் மழைநீர் வடிகால் அமைக்க வியாழக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பத்மநாபபுரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் ரேவன்கில் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், துணைத் தலைவர் முகமது சலீம், ஆணையர் செல்லமுத்து, பொறியாளர் சணல்குமார், சுகாதார அலுவலர் கிருஷ்ணன், மேலாளர் ஆதினம், உறுப்பினர்கள் விஜயகோபால், கொச்சுகிருஷ்ணபிள்ளை, முகமதுராபி, ரவிச்சந்திரன், பீனா, நாகராஜன், ரங்கசாமி, ரேணுகா உள்ளிட்ட 20 உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியவுடன் உறுப்பினர் ஹரிகுமார் பேசும்போது, நகராட்சியில் சுத்தரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தலைவர் ரேவன்கில்: தற்போது குடிநீர் ஆற்றூர் பகுதியில் இருந்து வருகிறது. இதை குடிநீர் வடிகால்வாரியம்தான் பராமரிக்க வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நகராட்சியல் குடிநீர் சுத்தரிப்பு நிலையம் கட்ட மருந்துக்கோட்டையில் இடம் தேர்வு செய்யப்பட்ள்ளது. அங்கு குடிநீர் சுத்தரிப்பு நிலையம் அமைக்கத் தேவையான முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றார் அவர்.
பத்மநாபபுரம் நகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து நகராட்சி சொத்துக்களில் அனுமதியின்றி விளம்பரம் செய்யத் தடை விதிக்க வேண்டும். மீறுவோர் மீது காவல் துறை, நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்மநாபபுரம் நகராட்சியின் வருமானத்தைப் பெருக்கும் பொருட்டு நகராட்சிப் பகுதியிலுள்ள செல்போன் டவர்களுக்கு சொத்துவரி விதிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.