தினமணி 23.12.2009
மதுரை, கோவையிலும் பெருநகர வளர்ச்சிக் குழுமம்
மதுரை, டிச.22: சென்னையைப் போல மதுரை, கோவையிலும் பெருநகர வளர்ச்சி குழுமம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர் சுர்ஜித்சிங் செüத்ரி தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர் ஊரமைப்புத்துறையின் மதுரை மண்டல ஆய்வுக்கூட்டம் அவரது தலைமயில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
மதுரை மண்டலத்துக்குள்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் ஆகிய வருவாய் மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதி கோரி அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் குறித்து இன்று ஆய்வுசெய்யப்பட்டது.
இதில் மொத்தம், கட்டட வரைபட அனுமதி கோரும் 83 மனுக்கள் நிலுவையில் இருந்தன. இதில் 65 மனுக்கள் மீது உடனடியாகத் தீர்வு காணப்பட்டது. எஞ்சியுள்ள 18 மனுக்கள் மீது 2 மாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
கட்டட வரைபட அனுமதி கோரி முறையாக பூர்த்திசெய்யப்பட்டு வரும் விண்ணப்பங்களுக்கு, அவர்கள் குறிப்பிடும் இடம் எவ்விதப் பிரச்னைகளுக்கும் உட்படாமல் இருந்தால் விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் அனுமதி வழங்கப்படும்.
இதேபோன்று ஈரோடு, திருப்பூரில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அடுத்தபடியாக திருச்சியில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.
கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிக்கான நிதியின் மூலம் தமிழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.150 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால், மதுரை மாநகராட்சிப் பகுதியில் கடந்த 1994}ம் ஆண்டு முதல் இந்நிதி வசூலிக்கப்படாமல் உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.19 கோடி வருவாய் இழப்புஏற்பட்டுள்ளது.
இந்நிதியை வசூலிக்காதது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நகர் ஊரமைப்பு ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் சுர்ஜித்சிங் செüத்ரி.
பேட்டியின்போது, நகர் ஊரமைப்பு ஆணையர் அசோக்டோங்ரே, மதுரை மாவட்ட ஆட்சியர் ந.மதிவாணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாஜிபகரே ரோகிணி ராமதாஸ், நகர் ஊரமைப்புத்துறை கூடுதல் இயக்குநர் ஜி.மாணிக்கவாசகம், துணை இயக்குநர் ஏ.வி.மகாதேவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.