தினகரன் 05.01.2010
கட்டுமான நிறுவனங்களுக்கு அனுமதி தரக் கூடாது
சென்னை : ‘‘விதிமீறும் கட்டுமான நிறுவனங்களுக்கு, கட்டிடம் கட்ட அனுமதி தரக் கூடாது’’ என்று சிஎம்டிஏவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை முகப்பேரை சேர்ந்த வனஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘மேற்கு முகப்பேர் கோல்டன் காலனியில் சிஎம்டிஏவிடம் வரைபட அனுமதி பெறாமல் 2 மாடிகளை சேகர் என்பவர் கட்டினார்.
இதற்கு மின் இணைப்பு மற்றும் கழிவுநீர் இணைப்பும் பெற்றுள்ளார். இந்த கட்டிடத்தை சுமதி என்பவருக்கு விற்றுள்ளார். இதற்கு வழங்கிய மின் இணைப்பையும் கழிவுநீர் இணைப்பையும் துண்டிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், சத்திய நாராயணன் ஆகியோர் விசாரித்தனர். சிஎம்டிஏ சார்பில் அரசு வக்கீல் ஐ.பரந்தாமன் ஆஜராகி, ‘‘இதுகுறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள் அளித்த உத்தரவு:
சிஎம்டிஏவிடம் வரைபட அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டியதை நீதிமன்றத்தில் சேகர் ஒப்புக் கொண்டார். அவர் கட்டிட வரைபடத்துக்கு அனுமதி கோரி சிஎம்டிஏவிடம் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இதன் மீது சிஎம்டிஏ உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இத்தகைய செயல்களை கட்டுப்படுத்த அரசு கடும் விதிகளை வகுக்க வேண்டும். சிஎம்டிஏவிடம் அனுமதி பெறாமல் கட்டுமான பணி செய்யும் கட்டுமான நிறுவனங்களை ‘பிளாக் லிஸ்ட்Õ செய்ய வேண்டும். இத்தகைய நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் எந்த அனுமதியும் தரக் கூடாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.