தினமணி 21.04.2010
வீடுகள், அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்க அரசு ஆணை
புதுச்சேரி, ஏப். 20: புதுச்சேரியில் வீடுகள், அரசு அலுவலகங்களில் மழைநீரைச் சேகரிக்க கட்டாயமாக்க அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் கூறினார்.
÷சட்டப்பேரவையில் இது குறித்து ஓம்சக்திசேகர் (அதிமுக) கேள்வி எழுப்பி பேசுகையில், தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்கினார். இதனால் தமிழகத்தில் குடிநீர் பிரச்னை குறைந்துள்ளது. புதுச்சேரி அரசும் இதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றார்.
÷இதற்கு அமைச்சர் நமச்சிவாயம் அளித்த பதில்:
÷புதுச்சேரியில் வீடுகள், அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக்க
அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. புதியதாகக் கட்டப்பட உள்ள கட்டடங்கள் மற்றும் தற்போதுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு உத்திகளைக் கையாள புதுச்சேரி கட்டட விதிகள் மற்றும் மண்டல ஒழுங்குமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்கி 19.3.2010-ல் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
÷அப்போது ஆர் விசுவநாதன் (இந்திய கம்யூனிஸ்ட்) குறுக்கிட்டு, இந்த அரசாணைக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டாயமாக்கப்படுமா என்று கேட்டார்.
÷இதற்கு முதல்வர் வைத்திலிங்கம் பதில் அளிக்கையில், எம்எல்ஏ விசுவநாதனின் ஆலோசனை நல்லதுதான். புஸ்ஸி தொகுதியில் ஏதாவது ஒரு தெருவை எடுத்து அந்த வீடுகள் முழுவதையும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தின்கீழ் கொண்டு வந்து அதை ஒருங்கிணைக்கும் வகையில் செய்ய வேண்டும் என்று அந்தத் தொகுதி எம்எல்ஏ ஆனந்திடம் கூறியுள்ளேன். அது போன்று எம்எல்ஏ விசுவநாதனும் தன்னுடைய ரெட்டியார்பாளையம் தொகுதியில் தன்னுடைய எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இப் பணியைச் செய்யலாம் என்றார்.
÷அப்போது குறுக்கிட்ட விசுவநாதன், ஏற்கெனவே என்னுடைய தொகுதியில் 7 இடங்களிóல் இது போன்ற மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளேன். இது அமைச்சருக்கும் தெரியும். அந்த 7 இடம் போதாது. 7 ஆயிரம் இடங்களில் அமைக்க வேண்டும் என்ற காரணத்துக்காகத்தான் இப்போது கேட்கிறேன் என்றார்.
÷இதற்குப் பதில் அளித்த அமைச்சர் நமச்சிவாயம், நிச்சயம் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.