தினமணி 28.04.2010
குழித்துறை நகராட்சியில் கட்டட அனுமதி வரம்பை உயர்த்த கோரிக்கை
மார்த்தாண்டம், ஏப். 27: குழித்துறை நகராட்சி பகுதியில் கட்டட அனுமதி வரம்பை உயர்த்த வேண்டும் என, நகர்மன்ற உறுப்பினர் பொன். ஆசைத்தம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் நகரமைப்பு இயக்குநருக்கு அனுப்பிய மனு:
குழித்துறை நகராட்சி பகுதியில் கட்டட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்கள் கட்டடங்களின் அளவு அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
இதனடிப்படையில் 1,000 சதுர அடி வரையிலான வணிக வளாகங்களுக்கும், 2,000 சதுர அடி வரையிலான வீடுகளுக்கும் நகராட்சியிலே அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த அளவுகளுக்கு மேல் உள்ள வணிக வளாகங்களுக்கு நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அனுமதியும் குடியிருப்புகளுக்கு நகரமைப்பு இயக்குநர் அனுமதியும் பெற வேண்டியுள்ளது.
இதனால் கட்டட அனுமதிக்காக வரும் பொதுமக்களுக்கு அதிக அலைச்சலும் பொருள்செலவும் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்கும் வகையில் 5000 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கும், 10000 சதுர அடி வரையிலான வணிக வளாகங்களுக்கும் நகராட்சியிலேயே அனுமதி வழங்க ஆவன செய்ய வேண்டும் என்றார் அவர்.