Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

ரூ180 கோடியில் மழை நீர் வடிகால் விரைவில் பணி துவக்கம்

Print PDF

தினகரன் 28.09.2010

ரூ180 கோடியில் மழை நீர் வடிகால் விரைவில் பணி துவக்கம்

கோவை, செப். 28:கோவை மாநகராட்சியில் 180 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் பணி கவுன்சில் ஒப்புதல் பெற்றதும், துவங்கப்படவுள்ளது. கோவை மாநகராட்சியில், பல இடங்களில் மழை நீர் வடிகால் இருக்கிறது. ஆனால், இந்த வடிகால் சாக்கடை கால்வாயாக மாறி விட்டது. ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், 700 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால், நீரோடை சீரமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவை மாநகராட்சி பகுதி 112 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. 3 கட்டமாக பணிகளை பிரித்து நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 31 மண்டல பகுதியில், 180 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடத்தப்படும். 731 கி.மீ தூரத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வடிகால் குளம், நீர் தேக்கம், நொய்யல் ஆற்றில் முடியும் வகையில் அமைக்கப்படும்.

கோவை நகரில் நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி, முத்தண்ண குளம், செல்வசிந்தாமணி, உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம், சங்கனூர் பள்ளம், நொய்யல் ஆறு, கருப்பராயன் ஓடை வரை வடிகால் அமைத்து தரப்படும். இந்த வடிகால் மூலம் கோவை நகரில் குளம், நீர் தேக்கங்களின் நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதாள சாக்கடை திட்ட பணிகள் 377.17 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. இந்த பணிகள் முடிந்தால், நகரில் சாக்கடை நீர் மழை நீர் வடிகால் மற்றும் குளங்களுக்கு செல்ல வாய்ப்பு மிக குறைவாக இருக்கும் என கருதப்படுகிறது.

மழை நீர் வடிகால் மூலம் மழை நீர் குளங்களுக்கு அதிகளவு பாயும் என மாநகராட்சியினர் தெரிவித்துள்ளனர். மழை நீர் வடிகால் பணிகளை நடத்த அதிக ஒப்பந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளது. மாநகராட்சி நிர்ணயித்த தொகைக் குள் பணிகளை முடிக்க பல ஒப்பந்த நிறுவனம் தயாராக இருக்கிறது. இதர திட்ட பணிகளை காட்டிலும் மழை நீர் வடிகால் பணிகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே பணிகள் தடையின்றி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநகராட்சி மன்ற கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றதும் பணிகளை உடனடியாக துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

நிலத்தடி நீரை மேம்படுத்திட கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும்: வின்சென்ட் எச்.பாலா

Print PDF

தினமணி 22.09.2010

நிலத்தடி நீரை மேம்படுத்திட கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும்: வின்சென்ட் எச்.பாலா

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "தமிழ்நாடு நீர்வளம் 2010' என்ற மாநாட்டில் நீர்வளம் தொடர்பான கையேட்டை வெளியிடுகிறார் மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர்

சென்னை, செப். 21: நிலத்தடி நீரை மேம்படுத்திட கடுமையான விதிகளை பின்பற்ற வேண்டும் என்று மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் வின்சென்ட் எச்.பாலா வலியுறுத்தினார்.

இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி...) சார்பில் தமிழ்நாடு நீர் வளம் 2010 என்ற தலைப்பிலான மாநாடு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் நீர்வளம் குறித்த கையேட்டை வெளியிட்டு, மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர்

வின்சென்ட் எச்.பாலா பேசியது:

மக்கள் தொகைப் பெருக்கம், தொழில்துறை வளர்ச்சி, வீட்டு உபயோகம் மற்றும் பொது சுகாதாரம் என பல்வேறு தேவைகளுக்கு குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் நீரை நம்பித்தான் வாழ்ந்து வருகின்றனர்.

தொழிற்சாலை கழிவுகள், நச்சுத்தன்மைமிக்க உரங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறது.

உணவுப் பாதுகாப்பு மற்றும் பருவ நிலை மாற்றம் போன்ற பல்வேறு பிரச்னைகளை வளர்ந்து வரும் நாடுகள் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

குடிநீர் பிரச்னை மிகப்பெரிதாக உருவெடுத்து வருகிறது. எனவே உணவுப் பொருள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் ஒரு சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் 81 சதவீத அளவுக்கு நீர்ப்பாசனம் செய்யலாம். இந்த சதவீதம் இந்திய அளவில் 77 விகிதமாக உள்ளது. தமிழகத்தில் 37 சதவீத நிலத்தடி நீர் வளம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை நீர் வடிகால் திட்டம் மற்றும் கடுமையான விதிகள் மூலம் நிலத்தடி நீரை மேம்படுத்தலாம். இதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 900 கிலோ மீட்டர் கடலோர பகுதியில் 640 கிலோ மீட்டர் பகுதி மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒரு கட்டத்தில் நீர்மட்டம் உயர்ந்து கடல்நீர் நிலப்பரப்பில் வர வாய்ப்புள்ளது.

இதை முன்னெச்சரிக்கையுடன் தடுப்பது அவசியமாகும். இருந்தபோதிலும் 40 கிலோ மீட்டர் கடலோரப் பகுதி தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தொழிற்சாலைகள் மறுசுழற்சி மூலம் நீர் வளத்தை முறையாகக் கையாள வேண்டும் என்றார் வின்சென்ட் எச்.பாலா.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண் இயக்குநர் சிவ்தாஸ் மீனா பேசியது:

சென்னையை அடுத்த பெரும்புதூரில் மறுசுழற்சி முறையில் கிடைக்கும் நீரின் தேவை குறித்து அறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

மறுசுழற்சி முறையில் கிடைக்கும் நீரை இதர தொழிற்சாலைகளுக்கு வழங்கவும் தயாராக உள்ளோம். இதற்கான எதிர்மறை சுத்திகரிப்பு நிலையம் விரைவில் கோயம்பேட்டில் அமைக்கப்பட உள்ளது என்றார்.

சி... தமிழ்நாடு பிரிவின் தலைவர் நந்தினி ரங்கசாமி மற்றும் என்.கே.ரங்கநாத், எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

மழை நீர் சேமிப்புக்கு ரூ.52.70 லட்சம் ஒதுக்கீடு

Print PDF

தினமலர் 22.09.2010

மழை நீர் சேமிப்புக்கு ரூ.52.70 லட்சம் ஒதுக்கீடு

மதுரை: மதுரை மாவட்டத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டும் வகையில், மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்த 52.70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: விவசாயம், குடிநீருக்கு நீர் அதிகம் பயன்படுத்துவதால் கிணறு, குழாய்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. நிலத்தடி நீர் செறிவூட்டும் வகையில், மழை நீர் சேமிப்புத் திட்டம் வேளாண்மை பொறியியல் துறை மூலம் 52.70 லட்சம் ரூபாய் மதிப்பில் செயல் படுத்தப்படுகிறது. சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தடுப்பணைகள், பண்ணைக் குட்டைகள் அமைக்கப்படும். தனியார் நிலங்களில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு இதர விவசாயிகள் 10 சதவீதம், ஆதி திராவிடர்கள் 5 சதவீதம் பங்களிப்புத் தொகை செலுத்த வேண்டும். வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர், 60, டி.பி.கே. ரோடு, தமிழ்நாடு பாலிடெக்னிக் அருகில், மதுரை, 0452- 267 7990, உதவி செயற்பொறியாளர் (வே.பொ.,), காளைத்தேவர் நகர், தேனி மெயின் ரோடு, உசிலம்பட்டி அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். விதிமுறைகளின்படி நில ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Page 44 of 96