Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: நிறைவேறியது தீர்மானம்

Print PDF

தினமலர் 13.09.2010

மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: நிறைவேறியது தீர்மானம்

மதுரை: மதுரை மாநகராட்சியை விரிவாக்கும் திட்டம், நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. நகரைச் சுற்றி, புதிதாக சேர்க்க வேண்டிய பகுதிகளை பட்டியலிட்டு, நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில், தீர்மானமாக மாநகராட்சி கொண்டு வந்தது. தீர்மானத்தில் கூறப்பட்டிருந்ததாவது: தற்போதைய மாநகராட்சி எல்லையின் பரப்பளவு 51.82 .கி.மீ., பாதாள சாக்கடை, குடிநீர், சாலை, தெரு விளக்கு, திடக்கழிவு மேலாண்மை ஆகிய திட்டங்களை எல்லையை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கிடைக்க செய்திட வேண்டும். இதற்காக ஆனையூர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் ஆகிய நகராட்சிகள், ஹார்விபட்டி, திருநகர், விளாங்குடி ஆகிய பேரூராட்சிகள், மேலமடை, உத்தங்குடி, வண்டியூர், கண்ணனேந்தல், நாகனாகுளம், திருப்பாலை, சின்ன அனுப்பானடி, சிந்தாமணி, ஐராவதநல்லூர், புதுக்குளம் பிட்-2, தியாகராஜர் காலனி ஆகிய ஊராட்சிகளையும் இணைத்து, 147.997 .கி.மீ., பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்ய அரசை கோருவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அரசு கட்டடமாகவே இருந்தாலும் அனுமதி அவசியம்

Print PDF

தினமலர் 13.09.2010

அரசு கட்டடமாகவே இருந்தாலும் அனுமதி அவசியம்

அரசு கட்டடமாகவே இருந்தாலும், அதற்கும் அந்தந்த அதிகார அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் என, தமிழ்நாடு நகர ஊரமைப்புச் சட்டம் கூறுகிறது. மத்திய, மாநில அரசுத்துறை என எந்தத் துறையின் சார்பில் புதிய கட்டடம் கட்ட வேண்டுமென்றாலும், நிலத்தை மேம்படுத்த வேண்டுமென்றாலும், 30 நாட்களுக்கு முன்பே முறைப்படி அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின், நூற்றாண்டு விழா கட்டடம் மற்றும் அதையொட்டி கட்டப்பட்டுள்ள பிற கட்டடங்கள் அனைத்தும், உள்ளூர் திட்டக் குழுமத்திடம் எந்தவித அனுமதியும் பெறாமலே கட்டப்பட்டுள்ளன.

 இந்த கட்டடம் கட்டப்படும்போதே, "கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்' அமைப்பு, இதை சுட்டிக்காட்டியது. சாலை பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற இவ்வமைப்பின் செயலர் கதிர்மதியோன், "அந்த கட்டடம் அனுமதியின்றி கட்டப்படுவதுடன், மருதமலை ரோட்டை 100 அடி ரோடாக அகலப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தை ஒதுக்காமல் கட்டடம் கட்டி வருவதாகவும்' புகார் எழுப்பினார். அவர் குறிப்பிட்ட 100 அடி ரோடு, தெலுங்குபாளையம் விரிவு அபிவிருத்தித் திட்டத்தில் இடம் பெற்றுள்ளது. புகார் எதிரொலியாக, 2008 டிச.12ல் வேளாண் பல்கலை துணை வேந்தருக்கு அப்போதைய கலெக்டரின் அறிவுறுத்தல்படி, உள்ளூர் திட்டக்குழுமம் நோட்டீஸ் அனுப்பியது.

 வேளாண் பல்கலை, பெயரளவுக்கு ஒரு விண்ணப்பத்தை 2009 ஜன.12ல் சமர்ப்பித்தது. அதை நிராகரித்த உள்ளூர் திட்டக்குழுமம், "நெடுஞ்சாலைத்துறைக்கு தேவையான நிலத்தை ஒதுக்கி, அத்துடன் விரிவான வரைபடத்தையும் சமர்ப்பிக்குமாறு' அறிவுறுத்தியது. வேளாண் பல்கலைக்கழகம் அதை திருப்பி அனுப்பவே இல்லை. 2009 ஏப்.8 மற்றும் ஜூலை 29 என அடுத்தடுத்து 2 நோட்டீஸ்களை கோவை உள்ளூர் திட்டக்குழுமம் அனுப்பியது. இதுவரையிலும் கட்டட அனுமதிக்கான விண்ணப்பத்தை விதிப்படி சமர்ப்பிக்க வில்லை. இதற்கிடையில், "அனுமதி பெறாத கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்கக்கூடாது' என்பதன் அடிப்படையில், இந்த கட்டடத்துக்கு மின் இணைப்பு வழங்க மின் வாரியம் மறுத்து வந்தது. மாவட்ட உயரதிகாரி கொடுத்த கடிதத்தின் அடிப்படையில், அதற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், "அரசு கட்டடத்துக்கு அனுமதி பெற வேண்டுமா' என்ற கேள்வி எழுந்தது. இதையறிந்து கொள்ளும் பொருட்டு, "கன்ஸ்யூமர் காஸ்' அமைப்பின் சார்பில், தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல் கோரப்பட்டது.

 அதற்கு தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலர் அசோக் டோங்ராவிடமிருந்து பதில் வந்துள்ளது. அதில், "அரசு கட்டடமாக இருந்தாலும் தமிழ்நாடு நகர ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 58ன் படி, கட்டட அனுமதி பெற வேண்டும்' என்று அவர் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுத்துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் எந்த கட்டடம் கட்டினாலும், முறைப்படி உரிய அதிகார அமைப்பிடம் கட்டாயமாக அனுமதி பெற வேண்டுமென்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இல்லாவிடில், எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சட்டரீதியாக எந்த இழப்பீடையும் கோர முடியாது என்பதும் இதனால் உறுதியாகியுள்ளது. எனவே, எல்லா அரசுத் துறைகள் கட்டும் கட்டடங்களுக்கு முறைப்படி அனுமதி பெற வேண்டுமென்பதை அரசு பகிரங்கமாக அறிவித்து, அதை செயல் படுத்த முன் வரவேண்டும்.

-நமது நிருபர்-

 

கழற்றிவிடப்படும் 59 உள்ளாட்சி அமைப்புகள் எல்லையை சுருக்கிக் கொள்ள வேலூர் மாநகராட்சி திட்டம்!

Print PDF

தினமணி 09.09.2010

கழற்றிவிடப்படும் 59 உள்ளாட்சி அமைப்புகள் எல்லையை சுருக்கிக் கொள்ள வேலூர் மாநகராட்சி திட்டம்!

வேலூர், செப். 8: தமிழக அரசால் முடிவு செய்யப்பட்ட 75 உள்ளாட்சி அமைப்புகளை இணைப்பதற்குப் பதிலாக, 16 உள்ளாட்சி அமைப்புகளை மட்டுமே இணைத்துக்கொள்ளவும், தனது எல்லையை சுருக்கிக் கொள்ளவும் வேலூர் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

வேலூர் நகராட்சி 2008 ஜூலை 29-ம் தேதி மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அப்போது வேலூர் நகராட்சியோடு 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 61 கிராம ஊராட்சிகளை இணைக்க அரசு உத்தேசித்திருந்தது.

இதற்கிடையே, வேலூர் நகரத்தின் தென்பகுதியில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி, மேற்குப் பகுதியில் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அப்துல்லாபுரம் விமான நிலையம், வடக்குப் பகுதியில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் காட்பாடி ரயில் நிலையம் ஆகியவற்றோடு கிழக்குப் பகுதியில் 25 கி.மீ. தொலைவில் உள்ள ராணிப்பேட்டை தொழில் நகரம் போன்றவை உத்தேச வேலூர் மாநகராட்சியில் இணைக்கப்படலாம் என 2010 மார்ச் 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த உத்தேச எல்லையில் 65 ஊராட்சிகள் உள்பட மொத்தம் 75 உள்ளாட்சி அமைப்புகள் இடம் பிடிக்கின்றன. மொத்தப் பரப்பு 383.845 சதுர கி.மீ. ஆனால், மதுரை (51.85), கோவை (105.6), திருச்சி (146.90), சேலம் (91.34), திருநெல்வேலி (108.65) என அனைத்து மாநகராட்சிகளைக் காட்டிலும் இது 3 அல்லது 4 மடங்குக்கு மேல் பெரியதாக இருக்கிறது.

அதிகமான கிராமப் பகுதிகளை வேலூர் மாநகராட்சியோடு இணைப்பதால், கிராமப் பகுதிகளுக்கு கிடைக்கும் அரசின் நிதி இனி கிடைக்காமல் போகலாம். மேலும், கலைஞர் வீட்டு வசதித் திட்டம் போன்ற திட்டங்கள், விவசாய வளர்ச்சிக்குரிய திட்டங்கள் செயல்படுத்த முடியாமல் போகும். பெரும்பாலான ஊராட்சிகள் வேலூர் மாநகராட்சியிலிருந்து நீண்ட தொலைவில் உள்ளன.

எனவே, வேலூர் மாநகராட்சியில் இருந்து ஆர்க்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை ஆகிய 3 நகராட்சிகள், மேல்விஷாரம் 3-ம் நிலை நகராட்சி, திருவலம் பேரூராட்சிகள், 57 ஊராட்சிகளை முற்றிலுமாக விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், வேலூர் மாநகராட்சி மற்றும் 16 உள்ளாட்சி அமைப்புகள் மட்டுமே இணைக்கப்படுவதால் மாநகரப் பரப்பு 84.715 சதுர கி.மீ. ஆக சுருங்கும். 2001-ம் ஆண்டின் மக்கள் தொகைப்படி மக்கள் தொகை 4,19,471 ஆகவும், 2009-2010-ம் நிதியாண்டின் கணக்கீட்டின்படி வருவாய் | 45.85 கோடியாகவும் இருக்கும்.

இதனால், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சாலை, குடிநீர், புதை சாக்கடை வசதிகள் போன்ற அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுத்த முடியும் என மாநகராட்சி உத்தேசித்துள்ளது.

மேலும், இதுபற்றி மாமன்ற உறுப்பினர்களின் கருத்தறிய அவசர கூட்டத்தையும் மாநகராட்சி வியாழக்கிழமை (செப்டம்பர் 9) ஏற்பாடு செய்துள்ளது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் அடிப்படையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலாளர் நிரஞ்சன் மார்டி கடந்த மார்ச் 17-ம் தேதி வெளியிட்ட உத்தேச எல்லைகளை மாற்றியமைக்குமாறு, வேலூர் மாநகராட்சி கோர உள்ளது.

 


Page 46 of 96