Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

மழை நீரை சேகரிக்கத் தயாராவோம் - சென்னை குடிநீர் வாரியம்

Print PDF

தினமணி 07.09.2010

மழை நீரை சேகரிக்கத் தயாராவோம் - சென்னை குடிநீர் வாரியம்

சென்னை, செப். 6: மழை நீரை சேகரிக்கத் தயாராவோம் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை தியாகராயநகரில் உள்ள சென்னை குடிநீர் வாரிய அலுவலகத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் பராமரித்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் தியாகராயநகர், வடபழனி, சாலிகிராமம் பகுதிகளைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட ஆகாஷ் கங்கா அறக்கட்டளையின் இயக்குநர் சேகர் ராகவன் பேசியது: மழைநீர் சேகரிப்புக்கு கசிவுநீர் குழிகளைவிட, கசிவுநீர் கிணறுகளே உகந்தவை. இதனால் அதிக அளவில் மழைநீரை நிலத்தடி நீராக சேமிக்க வாய்ப்பிருக்கிறது. குழிகளில் அடைப்பு ஏற்பட்டு உபயோகிக்க முடியாமலும் போகும்.

கசிவு நீர் கிணறுகளை மழைக்காலத்தில் ஓரிரு முறையும், மழைக்காலம் ஆரம்பிக்கும் முன்பு ஒரு முறையும் தூர் வார்வது நல்லது. மழைநீரைச் சேமிக்கும் வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் மொட்டை மாடியை சுத்தமாக வைத்திருப்பது மிக முக்கியம் என்றார் சேகர் ராகவன்.

தியாகராயநகர் அபிபுல்லா சாலையைச் சேர்ந்த கோவிந்தராஜ் பேசியது: மழை நீரைச் சேகரிக்கும் வகையில் சென்னை மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் சாலைகள், தெருக்கள் என அனைத்துப் பகுதிகளிலும் மழைநீர் வடிகால் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் சிறிய மழை பெய்தாலே மழை நீர் சாலைகளில் தேங்குவதும், கழிவுநீரில் கலந்து கடலில் கலப்பதுமாக வீணாகி வருகிறது.

இதைக் கருத்தில் கொண்டு மழைநீர் வடிகால் அமைப்பு பகுதிகளில் குறைந்து 10 அடிக்கு ஒரு சிறிய அளவிலான துவாரம் போட்டு குழாய் வழியாக மழைநீர் வடிகால் அமைப்புக்கு தண்ணீர் செல்லும் வகையில் வழித்தடம் ஏற்படுத்த வேண்டும். பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும் இதை செயல்படுத்த வேண்டும். இதனால் நிலத்தடி நீர் மட்டம் மேலும் உயரும் என்றார்.

இது போன்று பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

சென்னை குடிநீர் வாரிய நிலநீர் புவியியலாளர் எம். செüந்தரராஜன் கூறியது: மழைநீர் சேகரிப்பு அமைப்பு சென்னையில் சிறப்பாகச் செயல்படுகிறது. மழை நீர் சேகரிப்பு அமைப்புகளைப் பராமரிப்பது குறித்து மக்களின் கருத்துக்களைக் கேட்டறியவே ஒவ்வொரு மண்டலமாக இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

சென்னையில் மழைநீர் சேகரிப்பு அமைப்பால், நிலத்தடி நீர் நிலையைக் கண்காணிக்க நகரின் பல்வேறு இடங்களில் 759 கண்காணிப்பு கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நிலத்தடி நீர் நிலை வெகுவாக உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது 2004-2009-ம் ஆண்டுகளில் நிலத்தடி நீர் நிலை 6 மீட்டர் முதல் 8 மீட்டர் வரை உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 6 ஆண்களுக்கு முன்பு நிலத்தடி நீரில் கலந்துள்ள திடப் பொருளின் (உபயோகத்துக்கு லாயக்கற்ற) அளவு 5 ஆயிரம் பிபிஎம் (பார்ட்ஸ் பர் மில்லியன்) என்ற அளவில் இருந்தது. மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்ட பின்பு இப்போது இது 300 பிபிஎம் என்ற அளவாக குறைந்துள்ளது.

ஒரு கிரவுண்ட் (2,400 சதுர அடி) இடத்தில் குறைந்தது 2 மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். மேலும் மழைநீர் அமைப்புகள் அமைப்பது குறித்தும், பராமரிப்பது குறித்தும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், மழைநீர் சேகரிப்புப் பிரிவுக்கு 044-2845 4080, 2845 1300 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் இணையதளம் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். மழை காலம் வந்துவிட்டது. மழை நீரை வீணாக்காமல் சேகரிக்க ஒவ்வொருவரும் தயாராவோம் என்றார் செüந்தரராஜன்.

 

மாமன்றம் 9ம் தேதி கூடுகிறது மாநகராட்சி எல்லை 148 ச.கி.மீ பரப்புக்கு விரிவாக்க முடிவு

Print PDF

தினகரன் 07.09.2010

மாமன்றம் 9ம் தேதி கூடுகிறது மாநகராட்சி எல்லை 148 .கி.மீ பரப்புக்கு விரிவாக்க முடிவு

மதுரை, செப். 7: மாநகராட்சி எல்லை 148 சதுர கி.மீ. பரப்புக்கு விரிவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 3 நகராட்சிகள், 3 பேரூராட்சிகள், 11 ஊராட்சிகளை இணைத்து ஆணையிடக் கோரி வரும் 9ம் தேதி மாநகராட்சி மன்றம் அவசரமாகக் கூடி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்புகிறது.

மதுரை நகரம் 1971ல் மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது. அப்போது 22 சதுர.கி.மீ. பரப்பளவில் இருந்தது. 1974ல் சுற்றி இருந்த 13 கிராமங்களை இணைத்து 52 சதுர கி.மீ. பரப்புக்கு மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் பிறகு விரிவாக்கம் செய்யப்படவில்லை. நகருக்குள் ஒரு ச.கி.மீ. பரப்பில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு, மற்றும் திடக் கழிவு மேலாண்மை திட்ட சுகாதார வசதி போன்றவை மாநகரை ஒட்டி வளர்ச்சி அடைந்த பகுதிகளுக்கும் கிடைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 36 ஆண்டுகளுக்கு பிறகு மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்படுகிறது.

எல்லை விரிவாக்கம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின் தலைமையிலான குழு வரை படத்துடன் அறிக்கை தயாரித்து அரசிடம் சமர்ப்பித்தது. இதனை சென்னையில் நகராட்சி முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாக ஆணையாளர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து இறுதி வடிவம் அளித்தனர்.

தற்போதுள்ள 52 .கி.மீ. பரப்பை 148 .கி.மீ. பரப்புள்ள மாநகராட்சியாக விரிவாக்கம் செய்ய இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி மாநகராட்சியில் இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகள் விவரம்:

நகராட்சிகள்:

ஆனையூர், அவனியாபுரம், திருப்பரங்குன்றம்.

பேரூராட்சிகள்:& ஆர்.வி.பட்டி, திருநகர், விளாங்குடி.

ஊராட்சிகள்:

மேலமடை, உத்தங்குடி, வண்டியூர், கண்ணநேந்தல், நாகனாகுளம், திருப்பாலை, சின்ன அனுப்பானடி, சிந்தாமணி, ஐராவதநல்லூர், புதுக்குளம் பிட்&2, தியாகராஜர் காலனி.

இந்த பகுதிகள் அனைத்தையும் இணைக்க மாநகராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதற்காக மாநகராட்சி ஆணையாளர் செபாஸ்டின் சமர்பித்துள்ள குறிப்பு வரும் 9ம் தேதி அவசரமாக கூடும் மாநகராட்சி மன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்படுகிறது. இது உடனடியாக சென்னைக்கு அனுப்பப்படுகிறது. அங்கு வரும் 13ம் தேதி நகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர் தலைமையில் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

இதை அடுத்து இதே 148 .கி.மீ. பரப்புக்கு மாநகர் காவல்துறை ஆணையாளர் நிர்வாக எல்லையும் விரிவாக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

 

பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க நடவடிக்கை: சென்னை புறநகரில் 19 இடங்களில் புதிய கட்டடங்கள் கட்ட தடை

Print PDF

தினமணி 06.09.2010

பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க நடவடிக்கை: சென்னை புறநகரில் 19 இடங்களில் புதிய கட்டடங்கள் கட்ட தடை

சென்னை, செப். 5: பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்காக அண்மையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி சென்னை புறநகரில் 19 இடங்களில் நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள பகுதிகளின் அருகில் 100 மீட்டர் சுற்றளவு வரை புதிய கட்டடங்கள் கட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பழமையான நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க 1904-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் 1932-ம் ஆண்டு திருத்தப்பட்டது. ஆனால், அதன் பின் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுக்கு ஏற்ப இந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவில்லை. நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான புதிய விதிமுறைகள் 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. ஆனால், விதிகளை மீறுவோர் மீதான சட்ட நடவடிக்கை குறித்து தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. இதனை அமலாக்கும் அதிகாரத்தை யாருக்கு அளிப்பது என்பதிலும் குழப்பங்கள் நிலவின. இவ்வாறு கடுமையான விதிமுறைகள் அமலாக்கப்படாததால், நகர்புறப்பகுதிகளில் உள்ள நினைவுச் சின்னங்களுக்கு அருகில் புதிய பெரிய கட்டடங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் மத்திய அரசு பல்வேறு கட்ட ஆய்வு மற்றும் ஆலோசனைக்கு பிறகு பழமையான நினைவு சின்னங்களை பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது தொடர்பான புதிய சட்டத்தை சில மாதங்கள் முன்னர் நிறைவேற்றியது.

இதன்படி பழமையான நினைவுச் சின்னங்கள் மற்றும் அவை அமைந்துள்ள இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்படும் பகுதிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்கு எவ்வித கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளத் தடை விதிக்கப்படுகிறது.

இதற்கு அப்பால் உள்ள 200 மீட்டர் தொலைவுக்கு புதிய கட்டடங்கள் கட்ட இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் தடையின்மை சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

இந்த விதிகளை மீறுவோருக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு நினைவுச்சின்னம் உள்ள பகுதிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளும் அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

இதில் சென்னை மற்றும் சென்னை புறநகரில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த பட்டியல் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை சி.எம்.டி.. தனது எல்லைக்குள் உள்ள அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அனுப்பியுள்ளது.

சென்னையில்...

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் வெல்லெஸ்லி இல்லம், கிளைவ் இல்லம் உள்ளிட்ட 13 இடங்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜார்ஜ் டவுன் பகுதியில் சட்டக் கல்லூரி வளாகத்தில் டேவிட் ஏல் மற்றும் ஜோசப் ஹிம்னர்ஸ் ஆகியோரது நினைவுச் சின்னம் அமைந்துள்ள பகுதி, தண்டையார்பேட்டையில் உள்ள பழைய டவுன் ஹால் ஆகியவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை புறநகரில்...

சென்னை புறநகரில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் எருமையூரில் 32.68 ஏக்கர், குன்னத்தூர் கிராமத்தில் 22.9 ஏக்கர் மலை பகுதி, நந்தம்பாக்கம் கிராமத்தில் 0.91 ஏக்கர், சிக்காரயாபுரம் கிராமத்தில் 24.9 ஏக்கர், சிறுகளத்தூர் கிராமத்தில் 56.93 ஏக்கர் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பழைய தாம்பரம் தாலுகாவில், ஐயஞ்சேரி கிராமத்தில் 60 ஏக்கர், கடப்பேரி கிராமத்தில் 184.84 ஏக்கர், கிளாம்பாக்கம் கிராமத்தில் 46.95 ஏக்கர், நன்மங்கலம் கிராமத்தில் 8 ஏக்கர், நெடுங்குன்றம் கிராமத்தில் 48.40 ஏக்கர், ஒட்டியம்பாக்கம் கிராமத்தில் 73.50 ஏக்கர் பகுதிகளில் பழமையான நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள நிலங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்லாவரத்தில்...

பல்லாவரத்தில் பழைய பல்லாவரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சர்வே எண் 63-ல் 21.77 ஏக்கர், சர்வே எண் 56-ல் 36.15 ஏக்கர், திரிசூலம் பகுதியில் 51.25 ஏக்கர், பெரும்பாக்கம் கிராமத்தில் 157.67 ஏக்கர், பெருங்களத்தூர் கிராமத்தில் 206.77 ஏக்கர், செம்பாக்கம் கிராமத்தில் 164.47 ஏக்கர், மேடவாக்கம் அருகில் உள்ள சிட்டாலபாக்கத்தில் 20.63 ஏக்கர், பரங்கிமலை பகுதியில் 14.93 ஏக்கர், திருநீர்மலை கிராமத்தில் 58.75 ஏக்கர், வண்டலூரில் 3.31 ஏக்கர் இடங்களும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தவிர மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், மணிமங்கலத்தில் உள்ள பழமையான கோயில் அமைந்துள்ள இடங்களும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

 


Page 48 of 96