Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

மாநகராட்சி எல்லையை ஒட்டிய பகுதிகள் இணைப்புக்கு ஒப்புதல் அதிக இடைவெளியுள்ள ஊர்கள் பரிசீலனை

Print PDF

தினகரன் 30.08.2010

மாநகராட்சி எல்லையை ஒட்டிய பகுதிகள் இணைப்புக்கு ஒப்புதல் அதிக இடைவெளியுள்ள ஊர்கள் பரிசீலனை

மதுரை, ஆக. 30: மதுரை மாநகர் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்தும் மாநகராட்சியுடன் இணைப்புக்கு உயர் அதிகாரிகள் அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எல்லையிலிருந்து இருந்து இடைவெளியுள்ள ஊர்களை இணைப்பது மட்டும் அரசின் பரிசீலனையில் உள்ளது.

மதுரை மாநகராட்சி எல்லை 52 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ளது. 36 ஆண்டுகளாக எல்லை விரிவாக்கம் செய்யப்படாததால், நகருக்குள் நெருக்கடி அதிகரித்து ஒரு சதுர கி.மீ.க்கு 23 ஆயிரம் மக்கள் வாழ்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

200 சதுர கி.மீ. பரப்புள்ள மாநகராட்சியாக விரிவாக்கம் செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்து. இதற்கான ஆவணங்கள், வரைபடங்கள் மாநகராட்சி சார்பில் சமர்ப்பிக்கப்பட்டன. ஐகோர்ட் கிளை அமைந்துள்ள பகுதியை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டுமென அதன் பதிவாளர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். எனவே ஐகோர்ட் கிளை அமைந்துள்ள உத்தங்குடி ஊராட்சி பகுதி மாநகராட்சியில் இணைக்க ஒப்புதல் ஆனது.

வரைபடத்தில் மாநகராட்சி எல்லையை ஒட்டி இடைவெளியே இல்லாத அளவுக்கு விரிவடைந்துள்ள பகுதிகளை இணைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மேலமடை, சின்ன அனுப்பானடி, நாகனாகுளம், கண்ணநேந்தல், திருப்பாலை ஊராட்சிகள், பெருங்குடி. இணைப்புக்கு உறுதி செய்யப்பட்ட பகுதிகளுக்கு அப்பால் குறிப்பிட்ட தூரம் வீடுகளே இல்லாமல் இடைவெளியுள்ள பகுதிகளை மட்டும் மாநகராட்சியுடன் சேர்ப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. விரைவில் முடிவு வெளியாகும் என தெரிகிறது.

காவல் எல்லை விரிவாக்கமும் தயார்:

மாநகராட்சி எல்லை விரிவாக்கம் அறிவிப்பு வெளியானதும், காவல்துறை ஆணையர் நிர்வாக எல்லையையும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லை விரிவடைந்ததும், அதே அளவுக்கு காவல்துறை ஆணையர் நிர்வாக எல்லையும் விரிவடைகிறது.

 

தனியார் வசம் மாநகராட்சிக்குச் சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள திறந்தவெளி நிலங்கள்!

Print PDF

தினமணி 27.08.2010

தனியார் வசம் மாநகராட்சிக்குச் சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள திறந்தவெளி நிலங்கள்!

சென்னை, ஆக.26: சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய திறந்தவெளி நிலங்களை (.எஸ்.ஆர்.) வழங்காமல், தங்களது வசமே ஆண்டுக் கணக்கில் பராமரித்து வரும் 30-க்கும் மேற்பட்ட தனியார் வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சிக்குச் சேர வேண்டிய திறந்தவெளி நிலங்களின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள் மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டிய திறந்தவெளி நிலங்களை தங்களின் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கின்றன. கோடிக்கணக்கான மதிப்புள்ள அந்த நிலங்களை மாநகராட்சி மீட்க வேண்டும் என்று மேயர் மா.சுப்பிரமணியனிடம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி அண்மையில் புகார் செய்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டலிடம் இருந்து, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான 22 கிரவுண்ட் திறந்தவெளி நிலங்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியிடம் திறந்தவெளி நிலங்களை வழங்காத வர்த்தக நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, மாநகராட்சியிடம் நிலங்களை ஒப்படைத்துவிட்டோம் என்றுகூறிவிட்டு, தங்களின் வசம் நிலங்களைப் பராமரித்து வரும் நிறுவனங்கள், நிலத்தின் அளவு மற்றும் மதிப்பு ஆகிய விவரங்களும் திரட்டப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு நிலங்களை வழங்க வேண்டிய வர்த்தக நிறுவனங்கள் குறித்த பட்டியல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் (சி.எம்.டி..) இருந்து பெறப்பட்டுள்ளது. அதுபோல ஒவ்வொரு மாநகராட்சி மண்டல அலுவலர்கள் மூலம் இருந்தும் ஒரு பட்டியல் பெறப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டிய திறந்தவெளி நிலங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நிலத்தின் அளவு, அதன் தற்போதைய சொத்து மதிப்பு ஆகியவைக் கணக்கிடப்பட்டுள்ளது. திறந்தவெளி நிலங்கள் தொடர்பான பட்டியல் தயாரிப்பு பணிகளை மாநகராட்சி கண்காணிப்பு (விஜிலென்ஸ்) பிரிவு செய்து வருகிறது. பட்டியல் தயாரிப்பு முடிந்ததும் மேயரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மாநகராட்சி மூலம் கடந்த 4 ஆண்டுகளில் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் ரூ. 200 கோடி மதிப்பிலான சுமார் 3.50 ஏக்கர் நிலம், மாடம்பாக்கத்தில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 30.25 ஏக்கர் நிலம் என பல்வேறு இடங்களில் இருந்து ரூ.3,000 கோடி மதிப்புள்ள திறந்தவெளி நிலங்கள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

விதி என்ன?

சென்னையில் 3,000 சதுர மீட்டரில் இருந்து 10 ஆயிரம் சதுர மீட்டர் வரையில் பல மாடிக் கட்டடம் கட்டும் நிறுவனங்கள், மாநகராட்சிக்கு 10 சதவீத தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும்.

இதில் 10 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் கட்டடம் கட்டும் நிறுவனங்கள், அதில் 10 சதவீத இடத்தை (திறந்தவெளி) சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சி.எம்.டி..) மூலம் சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால், பல வர்த்தக நிறுவனங்கள் மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய திறந்தவெளி நிலங்களை வழங்காமல், தங்களது பயன்பாட்டில் வைத்துள்ளன. திறந்தவெளி நிலங்களை வழங்காத நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 80 என கணக்கிடப்பட்டுள்ளன.

அதில் சுமார் 56-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து திறந்தவெளி நிலங்கள் மீட்கப்பட்டு, கையகப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் திறந்தவெளி நிலங்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.

 

தர்மபுரி மாவட்டத்தில் அனுமதி இல்லாத வீட்டுமனை விற்பனை நிலம் வாங்கியவர்கள் தவிப்பு

Print PDF

தினகரன் 26.08.2010

தர்மபுரி மாவட்டத்தில் அனுமதி இல்லாத வீட்டுமனை விற்பனை நிலம் வாங்கியவர்கள் தவிப்பு

தர்மபுரி, ஆக.26: தர்மபுரி மாவட்டத்தில் அனுமதி இல்லாத வீட்டுமனைகள் விற்பனை அதிகரித்து வருகிறது. அதிக கமிஷனுக்கு ஆசைப்படும் புரோக்கர்களால் நிலம் வாங்குவோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டத்தில் பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சிகளில் வீட்டுமனைகள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விளை நிலங்கள், தரிசு நிலங்களில் நம் விருப்பம்போல் வீடுகளை கட்டிவிடமுடியாது.

உள்ளாட்சி அமைப்புகளில் தடையில்லா சான்று பெற்ற பின்னரே நிலத்தை வீட்டு மனைகளாக மாற்ற முடியும். விவசாயம் செய்யும் நிலங்களை உடனடியாக வீட்டு மனைகளாக மாற்றிவிட முடியாது. குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது அந்த நிலம் விவசாய பயன்பாட்டில் இல்லாமல் இருக்க வேண்டும்.

ஆனால் தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் வீட்டு மனைகளின் விலை உயர்வை பயன்படுத்திக் கொள்ளும் புரோக்கர்கள் சிலர் தவறான தகவல்களை கூறி, அனுமதியில்லாத நிலங்களை விபரம் தெரியாத மக்களுக்கு வாங்கிக் கொடுக்கின்றனர். இனிமையான பேச்சின் மூலம் மக்களை கவரும் புரோக்கர்கள், விலை குறைவு, போக்குவரத்து வசதி உள்ளது என்பதை மட்டும் கூறி நிலங்களை வாங்க வைக்கிறார்கள். இவர்கள் கமிஷனை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுகிறார்கள்.

இவர்களது தவறான தகவல்களை நம்பி நிலத்தை வாங்குவோர், அதற்கு அனுமதி பெறமுடியாமலும், விற்பனை செய்ய முடியாமலும் தவிக்கிறார்கள். இந்த நிலங்களுக்கு வங்கி கடனும் பெறமுடிவதில்லை.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அண்ணாத்துரை கூறும்போது, ‘தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அங்கீகாரம் பெறாத பல இடங்களை பிளாட்டுகளாக மாற்றியுள்ளனர். இடம் வாங்குவோர், அனுமதி குறித்து நன்று விசாரிக்க வேண்டும். அனுமதி இல்லாத இடங்களில் மனைகளை வாங்கி வீடுகட்டினால் குடிநீர் இணைப்பு பெற முடியாது. மேலும் நகராட்சியில் இருந்து எந்தவிதமான ஆவணங்களையும் பெறமுடியாது.

வீட்டு மனைகளை வாங்குவோர் கவனமாக செயல்பட்டால், இது போன்ற குழப்பங்களை தவிர்க்கலாம்" என்றார்.

சென்னையை மிஞ்சும் தர்மபுரி தர்மபுரியைச் சுற்றியுள்ள இலக்கியம்பட்டி, சோகத்தூர், தடங்கம் ஊராட்சிகளில் சதுர அடி ரூ350 முதல்ரூ1500 வரை விலை நிலவுகிறது. சென்னையில் லே&அவுட் அனுமதி பெற்ற வீட்டுமனைகள் கூட இந்த விலைக்கு தான் செல்லும். ஆனால் இந்த ஊராட்சிகளில் அனுமதி பெறாமலே அதிக விலைக்கு வீட்டுமனைகள் விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி நகரத்தில் சதுரஅடி ரூ28 ஆயிரம் வரை செல்கிறது.

 


Page 51 of 96