தினமலர் 26.07.2010
4 மணி நேரத்தில் மழைநீர் வடிய 1,400 கோடி ரூபாயில் மெகா திட்டம்
சென்னை : சென்னைவாசிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் மழை வெள்ள நீரை, நான்கு மணி நேரத்தில் வடிந்தோடி கடலில் கலக்கச் செய்ய, 1,400 கோடி ரூபாய் செலவில், மழைநீர் வடிகால், கால்வாய்கள் அமைக்கும் பணி, "ஜரூராக' நடந்து வருகிறது.சென்னையின் சராசரி மழையளவு 1,300 மில்லி மீட்டர். 60 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத நிலையாக, 2005ம் ஆண்டு 2,570 மி.மீ., மழை பெய்தது.இதனால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது.பாதிப்புகளை சீர் செய்ய, நிவாரணம் வழங்க பல கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலையில், நிரந்தர தீர்வுக்கு திட்டமிடப்பட்டது.
ஆக்கிரமிப்பும், நில ஆர்ஜிதமும் : சென்னை மற்றும் புறநகரை வெள்ள நீரில் இருந்து காப்பாற்றுவதில் கூவம் ஆறு, அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவை பெரும் பங்காற்றி வருகின்றன.நீர்வழித் தடங்களில் ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு, அவற்றை அப்புறப்படுத்தி மீண்டும் ஆக்கிரமிக்காமல் காப்பது அவசியம். இந்த புதிய திட்டத்திற்காக நில ஆர்ஜிதம் செய்யவும், அதற்கான இழப்பீடு வழங்கவும் உள்ளனர். மின் வாரியத்திற்கு 11.40 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது.அரும்பாடுபட்டு உருவாக்கும் இந்த திட்டம், மீண்டும் ஆக்கிரமிப்பின் பிடியில் போகாமல் இருக்க வேண்டும்.